கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு கோரும் கூட்டமைப்பு (Video)
வடகிழக்கில் விடுக்கப்பட்ட கடையடைப்பு அழைப்புக்கு கிழக்கு மாகாண தமிழ் பேசும்
மக்கள் முழுமையான ஆதரவினை வழங்கவேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு அழைப்பு
விடுத்துள்ளது.
முதன்முறையாக தமிழ் தேசிய கூட்டமைப்பாக அனைத்து கட்சிகளும் இன்றைய தினம் (17.10.2023) இணைந்து நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பானது மட்டக்களப்பு ஊடக அமையத்தில் நடைபெற்றது.
இலங்கை தமிழரசுக்கட்சி, ரெலோ, புளோட், ஜனநாயக போராளிகள் கட்சி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் இந்த ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டனர்.
பாரியளவிலான கடையடைப்பு
இந்த ஊடகவிலாளர் சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் இந்த போராட்டம் தொடர்பான அழைப்பினை விடுத்துள்ளார்.
மயிலத்தமடு,மாதவனை மேய்ச்சல் தரைப்பிரச்சினைக்கு தீர்வினை காணும் வகையில் ஜனாதிபதி எடுத்துள்ள தீர்மானத்தினை ஒரு வார காலத்திற்குள் நடைமுறைப்படுத்துவதாக தெரிவித்துள்ள நிலையில் அவற்றினை நடைமுறைப்படுத்தாவிட்டால் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாரியளவிலான கடையடைப்பு போராட்டத்தினை முன்னெடுக்கவேண்டிய சூழ்நிலையேற்படும் எனவும் இதன்போது எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
நீதிபதி சரவணராஜா மீது விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தலானது இந்த நாட்டில் நீதிபதிக்கே பாதுகாப்பு இல்லையென்பதை காட்டுகின்றது.
நீதிபதிக்கு அச்சுறுத்தல்
இந்த நாட்டில் இருக்கமுடியாது என்று நீதிபதி ஒருவரே வெளியேறிச் செல்கின்றார் என்றால் நீதித்துறையானது சுதந்திரமாக சுயாதீனமாக செயற்பட்டு சரியான நடுநிலையான தீர்ப்புகளை வழங்குவதற்கு அவருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
இதனை கண்டிக்கும் வகையிலும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் வடகிழக்கில் உள்ள தமிழ் பேசும் சமூகம் அனைத்தும் இணைந்து 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை கடையடைப்புக்கு ஆதரவு வழங்கவேண்டும்.
ஜனநாயகத்தினை பாதுகாப்பதற்காகவும் சட்டவாட்சியை பாதுகாப்பதற்காகவும் மனிதஉரிமையை பாதுகாப்பதற்காகவும் இந்த கடையடைப்பினை நடாத்துவதற்காக தமிழ் தேசிய பாதையில் பயணிக்கின்ற அனைத்துகட்சிகளும் ஒற்றுமையான இணைந்து இந்த வேண்டுகோளை விடுக்கின்றோம்.
இந்த கடையடைப்புக்கு வர்த்தக சமூகம், அரச திணைக்களங்கள்,போக்குவரத்துறையினர்,பொதுமக்கள் அனைவரையும் ஆதரவு வழங்குமாறு கோரிநிற்கின்றோம்'' என்றார்.

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக போருக்கு தயாராகும் நாடு - 800 ஏவுகணை தயாரிக்க சீனாவுடன் ஒப்பந்தம் News Lankasri
