தனியார்துறை ஊழியர்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி
தனியார்துறை ஊழியர்கள் ஓய்வுபெறும் குறைந்தபட்ச வயதெல்லையில் திருத்தம் மேற்கொள்ளும் சட்டமூலத்தை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பது தொடர்பில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை நேற்றைய தினம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கடந்த மார்ச் 23ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போது, தனியார் துறையினரின் குறைந்தபட்ச ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரிப்பதற்கான சட்டமூலம் ஒன்றை தயாரிக்க அனுமதி வழங்கப்பட்டது.
இதனபடிப்படையில் தயாரிக்கப்பட்ட அடிப்படை சட்டமூலம் பிரதமர் தலைமையில் நியமிக்கப்பட்ட ஆடைக் கைத்தொழிற்துறை மற்றும் வர்த்தக துறைகளில் தாக்கம் செலுத்தும் கொள்கை ரீதியானதும், சட்டரீதியானதுமான விடயங்கள் பற்றி ஆராயும் குழுவில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில் எட்டப்பட்ட உடன்பாடுகளுக்கமைய, முன்மொழியப்படும் சட்டம் நடைமுறைக்கு வரும் தினத்தில் 52 வயதை எட்டாத ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை 60 வயது வரை நீடிக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
அத்துடன், சட்டம் நடைமுறைக்கு வரும் திகதியில் 52 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய ஊழியர்களின் வயதுக்கேற்ப, மூன்று பிரிவுகளின் கீழ் அதிகபட்சம் 59 வயது வரை பணியாற்ற இயலுமான வகையில் ஏற்பாடுகளை உள்ளடக்கி இந்தச் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.