கட்டுநாயக்க விமான நிலையத்தில் தொழிலதிபர் கைது
சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் நபரொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்று (28) விமான நிலைய சுங்க அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவத்தில் இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய தொழிலதிபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
குறித்த நபர் இன்று காலை 8.35 மணிக்கு துபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு எமிரேட்ஸ் விமானம் EK-650 மூலம் வந்தடைந்தார்.
இதனையடுத்து, விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் அவரது 08 பயணப்பொதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 83,600 வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகள் அடங்கிய 418 சிகரெட் அட்டைப்பெட்டிகளை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்தநிலையில், மீட்கப்பட்ட சிகரெட்டுகளின் பெறுமதி 12 இலட்சத்தி 54 ஆயிரம் ரூபா என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |