வவுனியாவில் அனுமதிப்பத்திரமின்றி சேவையில் ஈடுபட்ட சொகுசு பேருந்துகள் கைப்பற்றல்
வவுனியா மாவட்டத்தில் உரிய வழித்தட அனுமதிப்பத்திரமின்றி பொதுமக்கள் போக்குவரத்து சேவையில் ஈடுபட்ட இரண்டு சொகுசுப் பேருந்துகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
வடக்கு மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் பொலிஸார் இணைந்து நேற்று (16.08.2026) வவுனியா மாவட்டத்தில் முன்னெடுத்த விசேட நடவடிக்கையின் போது, அனுமதிப்பத்திரமின்றி சேவையில் ஈடுபட்ட இரண்டு சொகுசு பேருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
பேருந்துகள் அடையாளம்
வடக்கு மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரனின் நேரடி கண்காணிப்பின் கீழ் இடம்பெற்ற இந்நடவடிக்கையில், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் செயற்பாடுகளுக்குப் பொறுப்பான பணிப்பாளர், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பறக்கும் படை, வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் பறக்கும் படை மற்றும் வவுனியா பொலிஸார் இணைந்து செயற்பட்டனர்.

பொதுமக்கள் போக்குவரத்து சேவையில் உரிய வழித்தட அனுமதிப்பத்திரமின்றி ஈடுபடும் பேருந்துகளை அடையாளம் கண்டு, அவற்றின் அனுமதிப்பத்திரங்கள் மற்றும் ஏனைய சட்டபூர்வ ஆவணங்களை பரிசோதித்து, சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுப்பதே இந்நடவடிக்கையின் பிரதான நோக்கமாகும்.
இதன்போது உரிய அனுமதிப்பத்திரமின்றி சேவையில் ஈடுபட்ட இரண்டு பேருந்துகள் கண்டறியப்பட்டதையடுத்து, அவை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டு பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளன.
இதனால் பயணிகளுக்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்களை குறைக்கும் வகையில் மாற்று பேருந்துகள் உடனடியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
எனினும், பேருந்து சேவை இடைநிறுத்தப்பட்டதன் காரணமாக சிறுவர்கள், முதியவர்கள் உள்ளிட்ட பயணிகள் குறிப்பிடத்தக்க அசௌகரியங்களை எதிர்கொண்டனர்.
இதேவேளை, கொழும்பிலிருந்து வவுனியா நோக்கி வந்துகொண்டிருந்த சுமார் ஐந்து பேருந்துகள் மதவாச்சி பகுதியில் இருப்பதாகவும், அவற்றிடம் உரிய வழித்தட அனுமதிப்பத்திரங்கள் இல்லாத காரணத்தால் வவுனியாவுக்குள் நுழைவதை தவிர்த்து அப்பகுதியில் தங்கியுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
நீதிமன்ற நடவடிக்கை
அனுமதியின்றி இயங்கும் இவ்வாறான பேருந்துகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டால், நீதிமன்றத்தில் முற்படுத்தப்படும் வரை அவற்றை மீண்டும் சேவையில் ஈடுபடுத்த முடியாத நிலை ஏற்படும்.
தற்போதைய நிலையில் பயணிகளின் தேவையை ஈடுசெய்ய போதுமான மாற்றுப் பேருந்துகள் இல்லாததையும் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்பையும் கருத்திற்கொண்டு, முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.
எவ்வாறாயினும், அனுமதிப்பத்திரமின்றி இயங்கும் பேருந்துகளுக்கு எதிரான சட்ட நடைமுறைப்படுத்தல் நடவடிக்கை கைவிடப்படவில்லை என்பதுடன், மேலும் ஒரு விசேட நடவடிக்கை மிக விரைவில் முன்னெடுக்கப்படும் என வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்தார்.
இந்நிலையில், தற்போது உரிய வழித்தட அனுமதிப்பத்திரமின்றி சேவையில் ஈடுபட்டு வரும் அனைத்து பேருந்து உரிமையாளர்களும் இயக்குநர்களும் உடனடியாக அவ்வாறான சேவைகளை நிறுத்தி, தேவையான வழித்தட அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
அனைத்து பேருந்து உரிமையாளர்களும் நடைமுறையில் உள்ள சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்றி, செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரங்களுடன் மட்டுமே சேவைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும், பொதுமக்களுக்கு பாதுகாப்பானதும் தடையற்றதுமான போக்குவரத்து சேவையை உறுதிப்படுத்துவதற்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
பயணிகள் போக்குவரத்து சேவைகளில் ஒழுங்கு, பாதுகாப்பு மற்றும் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவதற்காக இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 16 மணி நேரம் முன்
ஓமான் குறுக்கிட்டால் மொத்தமாக அழிப்போம்... ஈரான் போர் தொடர்பில் ட்ரம்ப் பகிரங்க மிரட்டல் News Lankasri