ஹட்டன் நகர பகுதியில் ஆபத்தான நிலையில் கட்டிடங்கள்: ஆய்வில் வெளிவந்த தகவல்கள்(Video)
ஹட்டன் நகரின் டிக்கோயா வீதியில் அமைந்துள்ள எம்.ஆர். நகர பகுதியில் இடிந்து விழும் கட்டிடங்கள் மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளை நுவரெலியா மாவட்ட கட்டிட ஆய்வு நிறுவன புவியியலாளர்கள் ஆய்வு செய்துள்ளனர்.
அதனையடுத்து, சில கட்டடங்களை சோதனையிட்டபோது, இதில் சில கட்டிடங்கள் இடிந்து விழும் அபாயத்தில் இருப்பதை அவதானித்ததாக புவியியலாளர் திரு.புத்திக விஜேகோன் தெரிவித்துள்ளார்.
மக்களுக்கான அறிவிப்பு
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,“குறித்த பகுதியில் அமைந்துள்ள மிகவும் ஆபத்தான நான்கு மாடி கட்டிடத்தில் வெடிப்புகள் காணப்பட்படுகின்றது. இதனால் அங்கிருந்தவர்களை வெளியேறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதுள்ள நிலவரப்படி, கட்டடம் உடனடியாக இடிந்து விழாது என்பது ஆய்வு மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. கட்டடம் கட்ட பெறப்பட்ட அனுமதி மற்றும் திட்டம் மற்றும் முறை கோப்புகளை சரி பார்த்து, இறுதி முடிவு எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.”என கூறியுள்ளார்.
போக்குவரத்து நடவடிக்கை
மேலும், வாகனங்கள் செல்ல முடியாமல் இருந்த அப்பகுதியில் உள்ள காமினிபுர நுழைவு வீதியை திறப்பதன் மூலம் இலகு ரக வாகனங்களுக்கு மட்டும் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.