வரவு செலவு திட்டம் கிராம மக்களின் வாழ்வாதாரத்தினை வலுவாக்கும் திட்டமாகும் : பூ.பிரசாந்தன் (Photo)
இந்த வரவு செலவு திட்டம் கிராமத்தினை நோக்கிய வரவு செலவு திட்டமாகவும், கிராம மக்களின் வாழ்வாதாரத்தினை வலுவாக்கும் வரவு செலவுத்திட்டமாகவும் அமைந்துள்ளதாக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளருமான பூ.பிரசாந்தன் (P.Prasanthan) தெரிவித்துள்ளார்.
கடற்றொழில் மற்றும் நீரியல் வள இராஜாங்க அமைச்சினால் நாடளாவிய ரீதியில் இரண்டு இலட்சம் சமுர்த்தி பெறும் குடும்பங்களுக்கான மனைப் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் திட்டத்திற்கமைவாக தடாகங்களில் நன்நீர் மீன் வளர்ப்பினை மேற்கொள்ளுவோருக்கான நிதியுதவிகள் வழங்கும் நிகழ்வு இன்று தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.
குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
கோவிட் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் உலக நாடுகளே பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள சூழ்நிலையில் இலங்கையில் வரவு செலவு திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்த வரவு செலவு திட்டம் கிராமத்தினை நோக்கிய வரவு செலவு திட்டமாகவும், கிராமமக்களின் வாழ்வாதாரத்தினை வலுவாக்கும் வரவு செலவுத்திட்டமாகவும் அமைந்துள்ளது.
மீன்பிடித்துறைக்காக அதிகளவான முன்னுரிமை இந்த வரவு செலவு திட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது.
எமது தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரின் தேர்தல் விஞ்ஞாபனமும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் (Gotabaya Rajapaksa) தேர்தல் விஞ்ஞாபனமும் கிராமிய பொருளாதாரத்தினை முன்னுரிமைப்படுத்தியதாகவே காணப்படுகின்றது.
எங்களது வீட்டு அடுப்புக்குள் பூனைபடுக்கும்போது அடுத்த அரசியல் பற்றி பேசுவதற்கோ, சமூகத்தினைப்பற்றி பேசுவதற்கோ யாருக்கும் நேரமிருக்காது, பேசவும் முடியாது.
சுயபொருளாதாரத்தில் ஒவ்வொரு குடும்பமும் தன்னிறைவு அடையவேண்டும்.
அதுவே அனைவரது எதிர்பார்ப்பாகும். அப்போதுதான் நாங்கள் கல்வி தொடர்பில் முன்னேற முடியும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகளவான வளங்கள் இருக்கின்றது. நிலவளம், நீர்வளம் என அனைத்து வளங்களும் இருக்கின்றது.
அதனை நாங்கள் பயன்படுத்தாத காரணத்தினாலேயே யாரோ அதனை பயன்படுத்த முனைகின்றனர்.
எங்கள் வளங்களை நாங்கள் பயன்படுத்தவில்லையென்றால் யாரோ ஒருவர் அதனை பயன்படுத்த முன்வருவார்கள்.
எங்கள் வளங்களை நாங்கள் பயன்படுத்த வேண்டும் என்பதே எமது தலைவர் சந்திரகாந்தனின் (Chandrakanthan) தூரநோக்கிய சிந்தனையாகயிருக்கின்றது.
எமது இளைஞர்கள் பயன்படுத்த வேண்டும். இந்த வரவு செலவு திட்டத்தில் விவசாய உற்பத்திக்காக காணிகள் வழங்குவதற்கு இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
கிராமிய பொருளாதாரத்தினை ஊக்குவிக்கின்ற ஒரு செயற்றிட்டமாக இந்த வரவு செலவு திட்டத்தினை நாங்கள் பார்க்கின்றோம்.
எமது மாவட்ட மக்களினை வலுவாக்குவதற்கு எவற்றையெல்லாம் பெற்றுக்கொள்ளமுடியுமோ அவற்றினையெல்லாம் பெற்றுக்கொள்வோம்.
இந்த வரவு செலவு திட்டத்தின் ஊடாக எமது மக்களுக்கு நன்மையளிக்கும் அனைத்து விடயங்களையும் எமது மக்களுக்கு பெற்றுக்கொடுப்போம்.
வரவு செலவு திட்டத்தின் ஊடாக நஞ்சற்ற உற்பத்திக்காக பல்வேறு மானிய கொடுப்பனவுகளும், அதற்கான நிதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டமானது மீன் பாடும் தேனாடு என்று சொல்லப்படுகின்றது.
இன்று மீனும் பாடாது, தேனும் ஓடாது. கடந்த 65 வருடங்களாக அரசியல் செய்த அரசியல் தலைமைகளே இதனை பொறுப்பேற்கவேண்டும்.
அத்துடன் அவர்களுக்கு வாக்களித்து உருவாக்கிய மக்களும் பொறுப்பேற்கவேண்டும்.
2008 - 2012ஆம் ஆண்டு வரையில் எங்கள் தலைவர் சந்திரகாந்தன் கிழக்கு மாகாணத்தில் பல்வேறு அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்துவந்த போது 2012ஆம் ஆண்டு தேனாறும் பாலாறும் ஓடவைக்கப்போகின்றோம் எங்களுக்கு வாக்களியுங்கள் என்றுகூறி மட்டக்களப்பு மாவட்டத்தினை சேர்ந்த ஒருவர் முதல்வராகயிருந்த நிலைமையினை மாற்றி இன்று மட்டக்களப்பு மாவட்ட மக்களை நடுத்தெருவில் விட்டுவிட்டார்கள்.
இன்று மாகாணசபை தேர்தல் வரப்போகின்றது என்றவுடன் புற்றுக்குள் இருந்துவரும் பாம்புகள் போன்று பல்வேறு பிரச்சாரங்களை முன்னெடுக்கின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தினை நேசிப்பதாக கூறிக்கொண்டு நாடாளுமன்றம் வந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றம் செல்வதே பிள்ளையானை விமர்சிப்பதற்காக மட்டுமாகும்.



ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri