பிரதமர் பதவிக்கு ரணில் பொருத்தமானவர்:அவரால் சர்வதேச உதவிகளை பெற முடியும்
நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் பிரதமர் பதவிக்கு பொருத்தமான நபர் ரணில் விக்ரமசிங்க என பெங்கமுவே நாலக தேரர் தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்க சிறந்தவர் என்பது இதற்கு காரணம் அல்ல எனவும் அவர் கூறியுள்ளார்.
நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியில் சர்வதேசத்தின் ஒத்துழைப்புடன் நாட்டை கட்டியெழுப்பக் கூடியவராக நாடாளுமன்றத்தில் இருக்கும் ஒரே நபர் ரணில் விக்ரமசிங்க மாத்திரமே எனவும் பெங்கமுவே நாலக தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற வைபவம் ஒன்றின் இறுதியில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
பெங்கமுவே நாலக தேரர் சிங்கள தேசியவாத அடிப்படைவாத கொள்கைகளை கொண்டுள்ள பௌத்த பிக்கு. அவர் கடந்த காலங்களில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக கடும் நிலைப்பாடுகளை கொண்டு செயற்பட்டு வந்துள்ளார்.
அத்துடன் பெங்கமுவே நாலக தேரர், தீவிரமான மகிந்த ராஜபக்ச ஆதரவாளர் என்பதுடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச , முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் அரசாங்கம் பதவி விலகக் கூடாது என வலியுறுத்தி பௌத்த பிக்குமார் கொழும்பில் அண்மையில் நடத்திய பேரணியிலும் இந்த தேரர் கலந்துக்கொண்டார்.
மேலும் நாலக தேரர் உட்பட சிங்கள பௌத்த தேசியவாத கொள்கைகளை கொண்ட பௌத்த பிக்குகள் ரணில் விக்ரமசிங்கவின் கொள்கைகளை கடுமையாக விமர்சித்து வந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.