பிரித்தானியாவில் கண்டறியப்பட்ட கோவிட் வைரஸ் திருகோணமலையிலும் கண்டுபிடிப்பு - வீ.பிரேமானந்
பிரித்தானியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கோவிட் வைரஸ் திருகோணமலையிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் திருகோணமலை பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.பிரேமானந் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
திருகோணமலை தொற்றுநோயியல் பிரிவு கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் கந்தளாய், சீனக்குடா, உப்புவெளி பிரதேசங்களில் பி.சி.ஆர் பரிசோதனைகளுக்காக மாதிரிகளைப் பெற்று அதனைக் கொழும்பு ஸ்ரீ ஜயவர்தனபுர ஆய்வுக் கூடத்திற்கு அனுப்பி வைத்துள்ள நிலையில் இந்த வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் 42 கோவிட் தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் 1961 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 20 மரணங்கள் இன்று வரை பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் திருகோணமலை மாவட்டத்தில் கடந்த மே மாதம் முதலாம் திகதி தொடக்கம் இன்று வரை 520 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 7 மரணங்களும், உப்புவெளி பிரதேசத்தில் 07 மரணங்களும் ஏற்பட்டுள்ளன.
திருகோணமலை மாவட்டத்தில் மூன்று வைத்தியசாலைகளிலும் 240 கட்டில்கள் தயார் நிலையில் உள்ளன.
மேலும் நோயாளர்கள் அதிகரிக்கும் பட்சத்தில் மூன்று வைத்தியசாலைகளைத் தெரிவு செய்து வைத்துள்ளதாகவும் திருகோணமலை பிராந்திய சுகாதார பிரதி பணிப்பாளர் வீ.பிரேமானந் மேலும் தெரிவித்துள்ளார்.