அதிரடி காட்டிய பொலிஸ் அதிகாரி! கொள்ளையர்களுடன் போராடி பல மில்லியன் ரூபாய் பணம் மீட்பு
அனுராதபுரம், தம்புத்தேகம பிரதேசத்தில் 223 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பணத்தை கொள்ளையடிக்கும் முயற்சியொன்று தவிர்க்கப்பட்டுள்ளது.
பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரின் வீர செயல் ஊடாக இந்த கொள்ளை சம்பவம் தவிர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விசேட பொருளாதார மத்திய நிலையத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் தனியார் வங்கியில் வைப்பிலிடுவதற்காக கொண்டு வந்த பணத்தையே இவ்வாறு திருட முயற்சித்துள்ளனர்.
கொள்ளையர்கள் கைவரிசை
இதன்போது துணிகரமாக செயற்பட்ட தம்புத்தேகம பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் இரு கொள்ளையர்களையும் தாக்கி கைது செய்ததாக தம்புத்தேகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தம்புத்தேகம பொலிஸ் பிரிவின் பொலிஸ் சார்ஜன்ட் சமில புத்திக என்பவரே இவ்வாறு உயிரை பணயம் வைத்து கூரிய ஆயுதங்களைக் கொண்டு வந்த இரு கொள்ளையர்களையும் வைத்து மீட்டுள்ளார்.
இந்த வர்த்தகர் நிதி மையத்தில் இருந்து 223 இலட்சத்திற்கும் அதிகமான பணத்துடன் தனது காரில் வங்கியை வந்தடைந்துள்ளார். பணத்துடன் வங்கிக்குள் நுழையும் போது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பணத்தை கொண்டு வந்த வர்த்தகரை தாக்கிவிட்டு பணத்துடன் தப்பி ஓட முயன்றுள்ளனர்.
பொலிஸ் அதிகாரி அதிரடி
இதன்போது தொழிலதிபருக்கும், கொள்ளையனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு, கொள்ளையர்கள் தொழிலதிபரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதன்போது பணம் சிதறியுள்ளது.
கொள்ளையர்கள் பணத்தை மீண்டும் எடுத்துக் கொண்டு செல்லும் போது அவ்வழியே சென்ற பொலிஸ் சார்ஜன்ட், இது கொள்ளை என்பதை உறுதி செய்து, உடனடியாக செயல்பட்டு அவர்களை பிடிக்க முயன்றுள்ளார்.
இதன்போது பொலிஸ் சார்ஜன்ட்டை கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட முயற்சித்த நிலையில் அவை பலனளிக்கவில்லை எனவும், சந்தேகநபர்கள் பொலிஸ் உத்தியோகத்தரை மிளகாய் பொடியால் தாக்கியதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த கொள்ளை சம்பவத்தின் போது மேற்கொள்ளப்பட்ட பலத்த முயற்சியின் பின்னர் சந்தேகநபர்கள் இருவரும் பணத்துடன் கைது செய்யப்பட்டதுடன், துப்பாக்கி மற்றும் கூரிய ஆயுதம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.