சிறுவர்கள் கோவிட் வைரஸால் பாதிக்கும் வீதம் அதிகரிப்பு! பெற்றோர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
கொழும்பு, சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையில் உள்ள கோவிட் பிரிவு பெரும்பாலும் நிரம்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து அங்கு கோவிட் தொற்றுடன் அனுமதிக்கப்படும் சிறுவர்கள் ஏனைய மருத்துவமனைகளுக்கு மாற்றப்படுவதாக, மருத்துவமனை பணிப்பாளர் வைத்தியர் ஜி. விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
சிறுவர்கள் கோவிட் வைரஸால் பாதிக்கப்படுவது தற்போது அதிகரித்து வருவதாக அவர் கூறியுள்ளார்.
கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட சுமார் 70 சிறுவர்கள் தற்போது சீமாட்டி ரிட்ஜ்வே மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
அதே நேரத்தில் மருத்துவமனையில் இருந்து தினமும் புதிதாக சுமார் 15 தொற்றுக்கள் பதிவாகின்றன என்று அவர் தெரிவித்துள்ளார்.
கோவிட் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கான சிகிச்சை அளிக்கப்படும் அறையின் அதிகபட்ச திறன் கிட்டத்தட்ட மீறியுள்ளது.
எனவே, சில சிறுவர்கள் மற்ற மருத்துவமனைகளுக்கு மாற்றப்படுகிறார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், சிறுவர்களுக்கான சிகிச்சை வசதிகளுக்காக சுகாதார அமைச்சின் மூலம் ராஜகிரியவில் ஒரு தனி கட்டிடத்தை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
எதிர்காலத்தில் சிறுவர்கள் தொடர்பான கோவிட் தொற்றுக்கள் மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதால், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் விடயத்தில் எச்சரிக்கையாக இருக்குமாறு வைத்தியர் விஜேசூரிய கோரிக்கை விடுத்துள்ளார்.