மலையக காணி உரிமையை வென்றெடுக்க களமிறங்கிய சிறுவனை தடுத்து நிறுத்திய ஹட்டன் பொலிஸார்..!
புதிய இணைப்பு
மலையக மக்களுக்கு நில உரிமை கோரி, நடைப்பயணம் மேற்கொண்ட சிறுவனை ஹட்டன் பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலவாக்கலையில் தொடங்கி கொட்டக்கலை நகர் வழியாக சுமார் 21 கிலோமீட்டர் தூரம் பயணித்து ஹட்டனில் உள்ள மல்லியப்பு சந்தியை அடைந்தபோது, ஹட்டன் பிரதேச மகளிர் பணியகத்தின் பிரதம ஆய்வாளர் குமாரி விஜேசிங்க மற்றும் ஹட்டன் நன்னடத்தை அலுவலக அதிகாரி ஆகியோர் அந்தப் பாடசாலை மாணவனையும் அவரது பெற்றோர்களையும் ஹட்டன் நகரத்திற்கு வரவழைத்துள்ளனர்.
பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை
இதனை தொடர்ந்து, சிறுவனை பயன்படுத்தி இதுபோன்ற ஒரு நடைபயணத்தை நடத்துவது சாத்தியமில்லை என்று எதிர்ப்பு தெரிவித்து நடையணத்தை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் ஹட்டன் சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளர் கூறுகையில், இந்த சிறிய வயதுடைய சிறுவனை பயன்படுத்தி ஏற்பாடு செய்த அனைவரிடமும் தனித்தனியே வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளது.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும், நடைபயணத்திற்கு பயன்படுத்தப்பட்ட சிறுவன் நன்னடத்தை அதிகாரிகள் மூலம் தெளிவூட்டல் செய்து அவனது பெற்றோரிடம் ஒப்படைக்கப்படுவார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முதலாம் இணைப்பு
மலையக மக்களின் காணி உரிமைகளைக் கோரி 7 வயது உலக சாதனையாளர் பிரேம் கார்கி தலவாக்கலையிலிருந்து கொழும்பு நோக்கி நடைபயணத்தை ஆரம்பித்துள்ளார்.
இந்த நடைப்பயணம் நேற்று(20.05.2026) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடைப்பயணம் ஆரம்பம்
மலையக வாழ் மக்களின் நில உரிமைகளை வென்றெடுப்பதையும், இந்த விடயம் தொடர்பில் அரசாங்கத்திற்கும் பொறுப்புள்ள துறைகளுக்கும் தெரிவிப்பதையும் நோக்கமாகக் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சிறுவன், கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்திற்கும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகத்திற்கும் கோரிக்கைகள் அடங்கிய கடிதங்களை வழங்குவதற்காகவே தலவாக்கலை நகரத்திலிருந்து 140 கிலோமீட்டர் நடைபயணத்தை முன்னெடுத்துள்ளார்.
இவ்வாறு தலவக்கலை நகரத்திலிருந்து தொடங்கி, கொட்டக்கலை நகரத்தை அடைந்த போது மருத்துவ மற்றும் வர்த்தக சமூகத்தினர் உற்சாகமான வரவேற்பளித்துள்ளனர்.
இந்த நடைப்பயணம் 7 நாட்களுக்குள் கொழும்பை சென்றடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

