குத்துச்சண்டைப் போட்டியில் வரலாற்றுச் சாதனை படைத்துள்ள முல்லைத்தீவு பெண்
காலி மாவட்டத்தில் இடம்பெற்ற 49ஆவது தேசிய விளையாட்டு விழாவில் பெண்களிற்கான குத்துச்சண்டைப் போட்டியில் முல்லைத்தீவு - பூதன்வயல் கிராமத்தைச் சேர்ந்த சசிகுமார் ஜெஸ்மிதா தங்கப் பதக்கத்தை வென்று வரலாற்றுச் சாதனையைப் புரிந்திருந்தார்.
இந்நிலையில் சாதனைப் பெண்மணியான சசிகுமார் ஜெஸ்மிதாவினை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகன் நேரில் சென்று வாழ்த்தியதுடன், உடல் உபாதைகாரணமாக சிகிச்சைபெற்றுவரும் சாதனைப் பெண்மணி ஜெஸ்மிதாவின் உடல்நிலை குறித்தும் நாடாளுமன்ற உறுப்பினர் கேட்டறிந்து கொண்டார்.
இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில், விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைக்களம் இணைந்து நடாத்திய 49வது தேசிய விளையாட்டு விழாவானது கடந்தமாதம் காலிமாவட்டத்தில் இடம்பெற்றது.
வாழ்த்திய ரவிகரன் எம்பி
குறித்த 49ஆவது தேசிய விளையாட்டுவிழாவில் பெண்களிற்கான குத்துச்சண்டைப் போட்டியில் பங்கேற்ற முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர்பிரிவின் பூதன்வயல் கிராமத்தைச்சேர்ந்த சசிகுமார் ஜெஸ்மிதா தங்கப் பதக்கத்தை வென்று வரலாற்றுச் சாதனையைப் புரிந்திருந்தார்.
இந்நிலையில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், 03.09.2025 நேற்று சாதனைப் பெண்மணியான சசிகுமார் ஜெஸ்மிதாவிற்கு நேரில் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தார்.
அத்தோடு உடல் உபாதைகாரணமாக தற்போதே முல்லைத்தீவு மாவட்ட பொதுவைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவரும் சாதனைப் பெண்மணியான ஜெஸ்மிதாவின் உடல்நலன் குறித்தும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கேட்டறிந்து கொண்டார்.








