30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கோவிட் பூஸ்டர் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை முன்னெடுப்பு
கோவிட் -19 தடுப்பூசி வழங்கல் திட்டத்தின் கீழ் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், 18 வயதிற்கு மேற்பட்ட பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் தொழிலாளர்கள் மற்றும் நோய்பரவும் ஆபத்துள்ள மக்கள் தொகுதியினருக்கும் (தொழிற்சாலைகள் மற்றும் பணியிடங்களில் பணிபுரிவோர், சுகாதாரத்துறை சாராத முன்னிலை ஊழியர்கள்) மேலதிகமாக மூன்றாவது தடவையாக கோவிட்-19 தடுப்பூசியானது இன்று திங்கட்கிழமை முதல் வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் வழங்கப்படுகிறது.
மேற்குறிப்பிட்டவர்கள் இரண்டாவது தடுப்பூசியைப் பெற்று ஆகக்குறைந்தது மூன்றுமாத இடைவெளியின் பின்னர் இத் தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளலாம்.
இரண்டு தடவைகள் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டவர்களில் கோவிட்- 19 தொற்றிற்கு உள்ளானவர்கள் அவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்ட நாளிலிருந்து 06 மாதகால இடைவெளியின் பின்னர் இத் தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளலாம்.
எனவே மேற்குறிப்பிட்டவர்களில் சினோபார்ம் அல்லது ஏதாவதொரு கோவிட் -19 தடுப்பூசியை இரண்டு தடவை பெற்றுக் கொண்டவர்கள் மட்டுமே தமது தடுப்பூசி அட்டையினை சமர்ப்பித்து தமக்குரிய மூன்றாவது தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளமுடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இத் தடுப்பூசிகள் வழங்கப்படும் நிலையங்கள் தொடர்பாக அந்தந்த பிரதேசங்களிற்குரிய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மூலம் மக்களிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம்
யாழ் மாவட்டத்தில் மேற்குறிப்பிட்டவர்கள் அந்தந்த பிரதேசங்களிற்குரிய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளில் அல்லது அவர்களால் அறிவிக்கப்படும் நிலையங்களில் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள முடியும்.
தடுப்பூசி அல்லது வேறுமருந்துகளிற்கு ஒவ்வாமையுடையவர்களுக்கு மார்கழிமாதம் 18 ஆம் திகதி முதல் பிரதி சனிக்கிழமைகளில் தடுப்பூசி வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ். மாவட்டத்தில் யாழ். போதனா வைத்தியசாலை மற்றும் பருத்தித்துறை, ஊர்காவற்துறை, தெல்லிப்பழை, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைகளிலும், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களில் உள்ள மாவட்ட பொது வைத்தியசாலைகளிலும் இத்தடுப்பூசிகள் வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
30 வயதிற்கு மேற்பட்டவர்களில் அவ்வாறான நிலைமைகள் இருப்பதாகச் சந்தேகிக்கப்பட்டு தடுப்பூசி வழங்கப்படாது திருப்பி அனுப்பப்பட்டவர்கள் தடுப்பூசி வழங்கும் நிலையத்தில் உள்ள வைத்திய அதிகாரியின் பரிந்துரைக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டு மேற்குறிப்பிட்ட வைத்தியசாலைகளில் ஏதாவது ஒன்றில் தமக்குரிய மூன்றாவது தடுப்பூசியினை பாதுகாப்பாகப் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ். மாநகர சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட மக்களுக்கான தடுப்பூசி வழங்கல் நாவலர் கலாச்சார மண்டபத்தில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
வவுனியா
வவுனியா வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது கோவிட் தடுப்பூசி பைசர் வழங்கச் சுகாதார பிரிவினரால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வவுனியா வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களில் பணிபுரிவோர் மற்றும் பாடசாலை கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்கள் அனைவரும் தமது அலுவலகங்களிற்கு அல்லது பாடசாலைகளிற்கு அருகில் உள்ள தடுப்பூசி நிலையங்களிற்குச் சென்று 3 ஆவது தடுப்பூசியை (பைசர்) பெற்றுக்கொள்ள முடியும்.
அந்தவகையில் (13.12) வவுனியா வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மற்றும் நெடுங்கேணி வைத்தியசாலையிலும் , (14.12) வவுனியா வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை, நெடுங்கேணி வைத்தியசாலை மற்றும் கற்குளம் பொதுநோக்கு மண்டபத்திலும், (15.12) கனகராயன்குளம் வைத்தியசாலை, (16.12) மாறா இலுப்பை பொதுநோக்கு மண்டபம் மற்றும் நடமாடும் சேவை, (17.12) வவுனியா வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மற்றும் நடமாடும் சேவை ஆகிய 5 நிலையங்களில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான பூஸ்டர் தடுப்பூசி காலை 9 மணி தொடக்கம் பிற்பகல் 2 மணி வரை ஏற்றப்படவுள்ளது.
வவுனியா வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் 30 வயதிற்கு மேற்பட்டவர்கள் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்று மூன்று மாதங்கள் கடந்திருப்பின் தமது தடுப்பூசி அட்டையுடன் சென்று மூன்றாவது தடுப்பூசி பூஸ்டரினை (பைசர்) பெற்றுக் கொள்ள முடியும்.
அத்தோடு முதலாவது, இரண்டாவது தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளாதவர்களும் குறித்த நிலையங்களுக்குச் சென்று தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள முடியும் எனச் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
மன்னார்
மன்னார் மாவட்டத்தில் 30 வயதுக்கு மேற்பட்ட இரண்டு தடுப்பூசிகளையும் பெற்று மூன்று மாதம் நிறைவடைந்தவர்களுக்கான 3வது பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தலைமையில் இன்று(13) காலை தொடக்கம் மன்னார் நகர சபை மண்டபத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த ஜூலை,ஆகஸ்ட் மாதங்களில் கோவிட் தடுப்பூசியின் இரண்டு டொஸ் களை பெற்ற 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணிகளே மேற்படி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அதன் அடிப்படையில் இராணுவத்தினர், விமானப்படையினர் மற்றும் சுகாதார ஊழியர்களின் ஒத்துழைப்புடன் அதிகளவானவர்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தடுப்பூசிகளைப் பெற்று வருகின்றனர்.
எதிர்வரும் வாரம் வரை குறித்த தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளமை
குறிப்பிடத்தக்கது.








