பள்ளிவாசலின் மீது குண்டுத் தாக்குதலென வெளியான தகவல்: பொலிஸ் மா அதிபருக்கு பறந்த கடிதம்
அக்குறணையில் குண்டு தாக்குதல் நடத்தப்படலாமென தெரிவிக்கப்பட்ட தகவலின் உண்மைத்தன்மையை கண்டறிந்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை தெரிவித்துள்ளது.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் பதில் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எஸ்.எம்.தாஸிம் மற்றும் பதில் தலைவர் அஷ்-ஷைக் ஏ.எல்.எம்.ரிழா ஆகியோர் குறித்த விடயம் தொடர்பில் கைச்சாத்திட்டு பொலிஸ் மா அதிபர் சந்தன டி விக்கிரமரத்னவுக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைத்துள்ளனர்.
குறித்த கடிதத்திலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சகவாழ்வை சீர்குலைக்கும் தீய சக்தி
மேலும் அந்த கடித்தில், இவ்வாறான தகவல்களை பரப்பி சமூகங்களுக்கிடையிலான சகவாழ்வை சீர்குலைக்கும் தீய சக்திகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.
கண்டி, அக்குறணையில் குண்டு தாக்குதல் நடத்தப்படலாமென தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்து, கண்டி உதவி பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் அலவத்துகொட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆகியோர் அக்குறணை அஸ்னா மஸ்ஜித் நிர்வாகிகளைச் சந்தித்து கலந்துரையாடியமை தொடர்பில் ஜம்இய்யா கவனம் செலுத்தி வருகின்றது.
இந்த சம்பவம் தொடர்பில் பாதுகாப்பு அதிகாரிகள் உரிய விசாரணைகளை நடத்தி இத்தகவலின் நம்பகத் தன்மையையும் அதன் விபரங்களையும் வெளிக்கொண்டு வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.