அம்பாறையில் அடையாளம் காணப்பட்ட ஆணின் சடலம்
அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனங்காடு பாலத்திற்கு அருகிலுள்ள ஆற்றில் இருந்து மீட்கப்பட்ட ஆண் ஒருவரின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
குறித்த சடலம், அக்கரைப்பற்று பகுதியில் பிறந்து கோளாவில் பகுதியில் வசித்து வந்த 51 வயதுடைய சாமித்தம்பி திவ்வியராஜ் என்பவருடையது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பொலிஸார் விசாரணை
புதன்கிழமை (18) அக்கரைப்பற்று பொலிஸாரால் மீட்கப்பட்ட இந்த சடலம் தொடர்பில், அவரைத் தேடி வந்த குடும்பத்தினர் ஊடகங்கள் வழியாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை அடையாளம் காட்டியுள்ளனர்.
இதனையடுத்து, அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் மரண விசாரணை அதிகாரி சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தை பார்வையிட்டனர்.

பின்னர், தடயவியல் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதையடுத்து, சடலம் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, சடலம் உறவினர்களிடம் நல்லடக்கத்திற்காக புதன்கிழமை (18) ஒப்படைக்கப்பட்டது.
உயிரிழந்தவரின் மனைவி
மேலும், உயிரிழந்தவரின் மனைவி ஒரு மாதத்திற்கு முன்பு மரணமடைந்த நிலையில், அவர் உறவினர்களது வீட்டில் தங்கி வந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பனங்காடு பாலத்திற்கு கீழ் உள்ள ஆற்றில் ஆண் ஒருவரின் சடலம் மிதந்த நிலையில் இருப்பதாக, மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் அக்கரைப்பற்று பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தை மீட்டனர்.

ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது, சடலம் சிதைந்த நிலையில் இருந்தது தெரியவந்துள்ளது.
அதேவேளை, குறித்த மரணம் முதலை தாக்குதலால் ஏற்பட்டதா, தவறான முடிவா அல்லது கொலை செய்து ஆற்றில் வீசப்பட்டதா என்ற கோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலதிக விசாரணை
சுமார் 5 அடி 6 அங்குல உயரம் கொண்டதாகவும், 45 முதல் 50 வயதுக்குள் மதிக்கத்தக்கவராகவும் காணப்பட்ட இந்த சடலம், பொலிஸார் மற்றும் தடயவியல் பிரிவினர் இணைந்து கரைக்கு கொண்டு வரப்பட்டது.

இதற்கிடையில், அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் காணாமல் போன நபர்கள் தொடர்பாக எவ்வித முறைப்பாடுகளும் பதிவு செய்யப்படாததுடன், அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கும் தகவல் வழங்கப்பட்டிருந்தது.
சடலம் அடையாளம் காணப்படாத நிலையில், பொதுமக்களின் உதவியையும் பொலிஸார் கோரியிருந்தனர்.
அக்கரைப்பற்று பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் வழங்கிய ஆலோசனையின் பேரில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
பணம் திருடியதால் ஜெயிலில் அடிவாங்கிய சோழன், நிலா உடனே செய்த காரியம்.. அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam