வவுனியாவில் தாயும் மகனும் சடலமாக மீட்பு: சம்பவ இடத்திற்கு சென்ற நீதிபதி
வவுனியா தோணிக்கல் பகுதியில் கத்திக் குத்துக்கு இலக்காகிய நிலையில் தாயின் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன், தூக்கில் தொங்கிய நிலையில் மகனின் சடலம் காணப்பட்ட நிலையில் பதில் நீதவான் த. ஆர்த்தி சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார்.
குறித்த சடலங்கள் நேற்று (19.09) மாலை மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
வைத்தியசாலையில் அனுமதி
வவுனியா, தோணிக்கல் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தாயும் அவரது மகனும் இருந்துள்ளனர். இந்த நிலையில் உறவினர் இருவர் மாலை குறித்த வீட்டிற்கு சென்ற போது தாய் இரத்த காயங்களுடன் வீட்டின் பிரதான அறையில் வீழ்ந்து கிடந்துள்ளார்.
இதனையடுத்து அவர் உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும் அவர் முன்னரே சாவடைந்துள்ளதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வீட்டின் அறை ஒன்றிற்குள் அவரது மகன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
உடற்கூற்று பரிசோதனை
சம்பவ இடத்திற்கு சென்ற குற்றத் தடுப்பு பொலிசார் தடவியல் பொலிசாரின் உதவியுடன் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்நிலையில் சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு இன்று (20.09) பதில் நீதவான் த. ஆர்த்தி சம்பவ இடத்திற்கு சென்று சடலங்களை பார்வையிட்டு, சடலங்களை உடற்கூற்று பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.

இதன்போது திடீர் மரண விசாரணை அதிகாரி சுரேந்திர சேகர் மற்றும் வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜே. எஸ்.ரத்னமலலா ஆகியோரும் பிரசன்னமாகி விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
குறித்த சம்பவத்தில் தோணிக்கல் பகுதியை சேர்ந்த 60 வயதுடைய அலஸ்கிறின் என்ற பெண்ணும் அவரது மகனான 35வயதுடைய அயந்தன் என்ற இளைஞருமே சடலமாக மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



