அம்பாறையில் கடலில் மூழ்கிய படகு!
இயந்திரம் உட்பட வலைகளுடன் கடலில் நங்கூரத்தில் இணைக்கப்பட்டு தரித்திருந்த பாரிய ஆழ்கடல் மீன்பிடி இயந்திரப் படகு ஒன்று கடலில் மூழ்கியுள்ளது.
அம்பாறை மாவட்டம் கல்முனை பிராந்திய சாய்ந்தமருது பிரதேச கடல் பகுதியில் இந்த சம்பவம் நேற்று(5.3.2026)மாலை இடம்பெற்றுள்ளது.
குறித்த படகினை மீட்டு கடற்கரைப் பகுதிக்கு இழுத்து கொண்டு வருவதற்கான முயற்சிகள் பல தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மூழ்கிய படகு
குறித்த படகானது கடற்கரையில் நங்கூரமிட்ட நிலையில் நிறுத்தப்பட்ட போதிலும் படகு இயந்திரம் உட்பட வலைகளுடன் கடலில் விழுந்து மூழ்கியுள்ளதாக அந்தப் பகுதி கடற்றொழிலாளர்கள் குறிப்பிட்டனர்.

இவ்வாறு மூழ்கிய படகு சுமார் ஒரு கோடிக்கும் மேல் பெறுமதியானதுடன் கனரக வாகனத்தின் உதவியுடன் கரையை நோக்கி இழுப்பதற்கான முயற்சிகளை கடற்றொழிலாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
கடற்கரைப்பகுதில் இருந்து சுமார் 500 மீற்றர் தொலைவில் மூழ்கியுள்ள குறித்த படகினை மீட்பதற்கான மற்றுமொரு முயற்சியாக இலங்கை கடற்படையினரின் உதவியும் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.
கடலரிப்பு
குறித்த பகுதியில் கடுமையான கடலரிப்பு இடம்பெற்று வருதுடன் படகுகளை நிறுத்தி வைக்கக் கூடிய இறங்கு துறை இன்றி பாரிய சிரமங்களை கடற்றொழிலாளர்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறாக தொடர்ச்சியாக கடலரிப்பினால் கடற்கரை பிரதேசம் காவு கொள்ளப்பட்டு போகுமேயானால் எதிர்காலத்தில் இந்தப் பிரதேசத்தில் கடற்கரை ஒன்று முழுமையாக இல்லாமல் போனலும் போகலாம் என்ற அச்சம் பிரதேச மக்களிடையே அதிகரித்துள்ளது.



