மன்னாரில் கிறிஸ்து பிறப்பை முன்னிட்டு விசேட வழிபாடுகள்
கிறிஸ்து பிறப்பை முன்னிட்டு நள்ளிரவு ஆலயங்களில் விசேட வழிபாடுகள் நடைபெற்றன.
மன்னார் மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்து பிறப்பு நள்ளிரவு ஆராதனைகள் நடைபெற்றன.
நள்ளிரவு திருப்பலி
மன்னார் மாவட்டத்தின் பிரதான கிறிஸ்துமஸ் நள்ளிரவு திருப்பலி மாவட்டத்தின் முதல் பேராலயமான மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் நள்ளிரவு திருப்பலி சிறப்பாக நடைபெற்றது.

மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் அருட்தந்தையர்கள் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப் பலியாக ஒப்புக் கொடுத்தனர்.
இதன்போது இயேசு பிறப்பை குறிக்கும் வகையில் நள்ளிரவு பாலன் திருச்சொரூபம் வைக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து கிறிஸ்மஸ் ஆராதனைகள் நடைபெற்றது.
விசேட பிரார்த்தனை
குறித்த ஆரானைகளின் போது நாட்டு மக்களை பாதுகாக்கவும், நாட்டில் நீடித்த அமைதியும், மகிழ்ச்சியும் நிலவவும், புயல் மற்றும் வெள்ள அனர்த்தம் காரணமாக உயிர் நீத்த மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும் விசேட பிரார்த்தனைகளும் ஆயரினால் நடத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து கிறிஸ்துமஸ் விசேட கூட்டுத்திருப்பலி ஆயர் தலைமையில் அருட்தந்தையர்கள் இணைந்து ஒப்புக்கொடுத்தனர்.
திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து அனைவருக்கும் ஆயர் மற்றும் அருட்தந்தையர்களினால் அருளாசி வழங்கப்பட்டது.
கிறிஸ்துமஸ் ஆராதனையை முன்னிட்டு தேவாலயத்தில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து விசேட பாதுகாப்பை வழங்கியிருந்தனர்.
இதன்போது மன்னார் மறை மாவட்டத்தைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான மக்கள் நள்ளிரவுத் திருப்பலியில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

செய்தி - ஆஸிக்
முதலாம் இணைப்பு
இயேசு எங்களுடன் இருக்கிறார், இந்த துன்பகரமான சூழலிலும் நாங்கள் நம்பிக்கையை இழக்க கூடாது, நம் நடுவிலே நமக்காக பாடுபட்ட, நமக்காக பல துன்பங்களை அனுபவித்த, உயிர்த்த இயேசு ஆண்டவர் எங்களோடு இருக்கிறார் என மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
கிறிஸ்து பிறப்பு விழாவையொட்டி அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
நத்தார் வாழ்த்து
அந்த வாழ்த்துச் செய்தியில் மேலும், கிறிஸ்துவில் பிரியமான சகோதர சகோதரிகளே உங்கள் அனைவருக்கும் நத்தார் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இக்கட்டான சூழ்நிலையில், எதிர்பாராத இயற்கை பேரழிவின் மத்தியில் உங்களுடைய துன்பத்துடன் இணைந்து எங்கள் இதயங்களும் துடிக்கிறது.
இந்த நிலையை நாங்கள் கிறிஸ்து இயேசுவின் பிறப்புடன் ஒப்பிட்டு பார்க்கும் போது கிறிஸ்து துன்பகரமான சூழலிலே அவரும் பிறந்தார். இந்த உலகிலே நாங்கள் படுகின்ற கஷ்டங்கள், துன்பங்கள், கவலைகள் எல்லாவற்றையும் இயேசு ஆண்டவர் அனுபவித்தவராகவே இருக்கிறார்.

ஆகவே இயேசு எங்களுடன் இருக்கிறார். இம்மானுவேல் நாங்கள் யேசுவோடு இருக்கிறோம். இந்த துன்பகரமான சூழலிலும் நாங்கள் நம்பிக்கையை இழக்க கூடாது. நம் நடுவிலே நமக்காக பாடுபட்ட, நமக்காக பல துன்பங்களை அனுபவித்த, உயிர்த்த இயேசு ஆண்டவரும் எங்களோடு இருக்கிறார்.
இயேசு பிறப்பின் வருகையை தான் நாங்கள் கொண்டாடுகிறோம். இயேசு எங்களை ஒருபோதும் கைவிட மாட்டார். நாங்கள் தனியாக இல்லை. இமானுவேல் நான் உங்களுடன் இருக்கிறேன்.
இயேசுவின் பிறப்பு
அதாவது கடவுள் நம்மோடு இருக்கின்றார். இந்த விசுவாசத்தோடும், அன்போடும், ஒற்றுமையோடும், ஒரே மனபான்மையோடும், ஒருவருக்கு ஒருவர் உதவி செய்கின்ற நல் கலாச்சாரத்தையும் ஒருவர் ஒருவரை தாங்கிக் கொள்கின்ற நல்ல கலாச்சாரத்தையும் நாங்கள் இந்த நாட்களிலே கற்றுக் கொள்ளுவோம்.

இந்த நாட்களில் நாங்கள் ஆடம்பரங்களை தவிர்த்துக் கொண்டு, இயேசுவின் உடன் இருப்பை நாங்கள் உணர்ந்து கொண்டு, எங்களுடைய உடன் சகோதர்களுடன் ஒன்றித்திருக்கும் இந்த வேளையிலே இயேசு உங்கள் ஒவ்வொருவருக்கும் அமைதியையும், அருளையும் அருள்வாராக.
நமக்கு எல்லாம் புதுப்பிக்கப்பட்ட ஒரு வாழ்வை இந்த நத்தார் பெருவிழா கொண்டு வருவதாக. நாங்கள் எல்லாவற்றிற்கு மேலாகவும் ஆண்டவருடைய இருப்பை உணர்ந்து கொண்டு நாங்கள் ஒருவர் ஒருவரோடு ஒற்றுமையாக சமாதானத்துடன் வாழவும், இயேசுவின் பிறப்பு ஊடாக வழி நடத்திச் செல்வாராக. உங்கள் அனைவருக்கும் நத்தார் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |