இந்தியாவில் கோவில் கூட்ட நெரிசலில் ஏற்பட்ட விபரீதம்! 7 பேர் பலி - பலர் வைத்தியசாலையில் அனுமதி
புதிய இணைப்பு
பீகாரில் கோவில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 7 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவிலின் சுற்றுப்புறச்சுவர்கள் இடிந்து விழுந்ததாகவும், மின் கம்பங்கள் சரிந்து விழுந்து பக்தர்கள் மீது மின்சாரம் பாய்ந்ததாக தவறான தகவல் பரவியமையினால் மக்கள் அலறியடித்து ஓடியதாகவும், இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழப்புகள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், அரசு சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலும், நிவாரணத் தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முதலாம் இணைப்பு
இந்தியாவின் - பீகாரில் கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று அதிகாலை (17) சுமார் 50,000 பக்தர்கள் கோவிலில் திரண்டிருந்த நிலையில், கோவில் வளாகத்தில் மின்சார கம்பியொன்று அறுந்து விழுந்ததால், மக்கள் அச்சத்தில் ஓடியபோது இந்த கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
கூட்ட நெரிசல்
இந்த சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன், அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் என முதற்கட்ட அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 12 பேர் படுகாயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில் காயமடைந்த 12 பேர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்தவர்களில் 4 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஏனைய 3 பேரை அடையாளம் காணும் பணி நடந்து வருகின்றது.
இந்த சம்பவம் தொடர்பாக சிலர் காவலில் எடுக்கப்பட்டுள்ளதுடன், பீகார் பொலிஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.