கரடி தாக்குதல் - நாமல்வத்தை பகுதியில் சம்பவம்
திருகோணமலை - நாமல்வத்தை காட்டுப்பகுதிக்குள் தேன் எடுக்கச் சென்றவர் மீது கரடி தாக்கிய நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று (29)மாலை இடம் பெற்றுள்ளது.
இவ்வாறு கரடி தாக்குதலுக்கு உள்ளானவர் அதே பகுதியைச் சேர்ந்த 5 பிள்ளைகளின் தந்தையான வெள்ளையன் என்றழைக்கப்படும் மஹ்ரூப் (52வயது) எனவும் தெரியவருகின்றது.
நாமல்வத்த பகுதியிலிருந்து காட்டுக்குத் தேன் எடுப்பதற்காக 4 பேர் வரிசையாகச் சென்ற போது கரடி தனது குட்டியை அருகே வைத்துக்கொண்டு நின்றதாகவும், நான்கு பேரில் மூவருக்குச் சிறு காயம் ஏற்பட்டதாகவும், மற்றைய நபருக்குப் படுகாயம் ஏற்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை குறித்த தாக்குதலுக்கு உள்ளான நபர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
குறித்த பிரதேச மக்கள் தங்களது வாழ்வாதார தொழிலாகத் தேன் எடுப்பதையே முக்கிய தொழிலாகச் செய்து வருவதாகவும் குறிப்பிடுகின்றனர்.