நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற கைது நடவடிக்கைகள்
புதுக்குடியிருப்பு
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கள்ளநோட்டு அடித்த குற்றச்சாட்டில் ஒருவர் சிறப்பு அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதுக்குடியிருப்பு விநாயகர்
வீதி தேவிபுரம் பகுதியில் கள்ளநோட்டு அச்சிடப்படுவதாக சிறப்பு
அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக சிறப்பு அதிரப்படையினர்
மேற்கொண்ட நடவடிக்கையின் போது குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம்
யாழ்.வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் - சவுக்கடி பகுதியில் இருந்து 50 கிலோ, 463 கிராம் எடையுடைய கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.
இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், இந்த கஞ்சா பொதிகள் சவுக்கடி காட்டுப் பகுதியில் ஓலைகளால் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.
எனினும் சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை. மீட்கப்பட்ட கஞ்சா பொதிகள் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மட்டக்களப்பு
மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலையில் உள்ள கதிரைகளை திருடி விற்பனை செய்த குற்றச்சாட்டில் ஆசிரியர் கலாசாலையின் காவலாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கை நேற்று (08.03.2023) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு - புதூரைச் சேர்ந்த 47 வயதுடைய நபரே இந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது நடவடிக்கை
குறித்த கைது நடவடிக்கையின் போது சந்தேகநபரால் திருடப்பட்ட 40 கதிரைகளும் மீட்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவத்தில் ஆசிரியர் கலாச்சாலையில் நிர்வாகம், கடந்த 3ஆம் திகதி கதிரைகளை கணக்கெடுத்த போது 34 பிளாஸ்டிக் கதிரைகள் மற்றும் 6 மரக்கதிரைகள் உட்பட 40 கதிரைகள் காணாமல் போயுள்ளதாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கதிரை திருட்டு
இவர் தினமும் கடமைமுடிந்து வீட்டுக்குச் செல்லும் போது ஒவ்வொரு கதிரைகளை திருடிக் கொண்டு சென்று அந்த பகுதியிலுள்ள கடை ஒன்றில் பிள்ளைக்கு மருந்துவேண்ட பணம் தேவை எனவும், தனது வீட்டுக்கதிரை என கூறி விற்பனை செய்துள்ளார்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை இன்று (09.03.2023) மட்டக்களப்பு நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.