மட்டக்களப்பு பொலிஸாரின் விசேட நடவடிக்கை:இருவர் கைது(Photo)
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதூர் பகுதியில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட இரண்டு வீடுகள் இன்று (01.12.2022) அதிகாலை முற்றுகையிடப்பட்டுள்ளது.
இதன்போது குறித்த வீடுகளிலிருந்து பெருமளவான கசிப்புகள் மீட்கப்பட்டுள்ளதுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரகசிய தகவல்
மட்டக்களப்பு நகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் சட்டவிரோத போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனைகளை தடுப்பதற்கு மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தின் போதையொழிப்பு பிரிவு மற்றும் பொலிஸ் புலனாய்வுத்துறை இணைந்து விசேட நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றன.
இதனடிப்படையில் மட்டக்களப்பு பொலிஸ் புலனாய்வுத்துறைக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் புதூர்ப்பகுதியில் இரண்டு இடங்கள் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தின் போதையொழிப்பு பிரிவினால் சுற்றிவளைக்கப்பட்டு அங்கிருந்த பெருமளவான கசிப்பு மீட்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற நடவடிக்கைகள்
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தின் போதையொழிப்பு பிரிவின் பொறுப்பதிகாரி உபபொலிஸ் பரிசோதகர் கஜநாயக்க,பொலிஸ் சாஜன் ரி.கிருபாகரன் ஆகியோர் தலைமையிலான பொலிஸ் குழுவினர் இந்த முற்றுகையினை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது ஒரு வீட்டிலிருந்து 40,000மில்லி லீட்டர் கசிப்பும் இன்னுமொரு வீட்டிலிருந்து 10,000 மில்லி லீட்டர் கசிப்பும் மீட்கப்பட்டதுடன் இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்களையும் கைப்பற்றப்பட்ட கசிப்பையும் நீதிமன்றில்
முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.