கடந்த 50 வருடத்தில் எதிர்கொள்ளாத நெருக்கடியை எதிர்நோக்கும் மட்டக்களப்பு மக்கள்(VIDEO)
இந்த நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த 50 வருடத்தில் எதிர்கொள்ளாத நெருக்கடியை மட்டக்களப்பு மாநகர மக்கள் இன்று எதிர்கொள்வதாக மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதி மக்களின் அபிவிருத்திக்கு நியுசிலாந்து என்றும் உதவிகளை வழங்கும் என இலங்கைக்கான நியூசிலாந்து தூதுவர் உறுதியளித்துள்ளதாக மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாநகரசபைக்கு இன்று இலங்கைக்கான நியூசிலாந்து தூதுவர் மைக்லே அப்ளிடன்,உதவி தூதுவர் அன்ரூவ் ரவ்ளர் ஆகியோர் விஜயம் செய்தனர்.
இவர்களை மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன்.பிரதி முதல்வர் கே.சத்தியசீலன் ஆகியோர் வரவேற்றதுடன்,மாநகரசபையில் கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டனர்.
இதன்போது மட்டக்களப்பு மாநகரசபையின் செயற்பாடுகளை கேட்டறிந்து கொண்ட தூதுவர்கள் மாநகரசபைக்குட்பட்ட பகுதி மக்களின் நிலைமைகள் குறித்தும் கேட்டறிந்துகொண்டார்.
அத்துடன் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதியானது சிறுவர் நேய நகராக மாற்றப்பட்டுள்ள நிலையில் மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் சிறுவர் பூங்காக்களை அமைப்பதற்கான உதவிகளையும் வழங்க உறுதியளித்துள்ளதாகவும், மாநகரசபையின் முதல்வர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,
இந்த அரசாங்கத்தின் தவறான பொருளாதாரக் கொள்கை, விவசாயக் கொள்கை சம்பந்தமாக நாங்கள் கலந்துரையாடினோம். அந்தப் பிழையான கொள்கைகள் காரணமாக எமது மாநகரத்தில் மக்கள் படுகின்ற துன்பங்கள் சம்பந்தமாக நாங்கள் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளோம்.
அத்தியாவசியப் பொருட்களைப் பெறுவதற்கே முண்டியடிக்கின்ற நிர்ப்பந்தம், சீமெந்துகள் பெறுவதற்குக் கூட சிபாரிசு கேட்கின்ற அளவிற்கு இந்த அரசாங்கத்தின் செயற்பாடு எமது மக்களை கொண்டு வந்திருக்கின்றது.
கடந்த ஐம்பது வருட காலத்தில் இவ்வாறானதொரு சூழலை நாங்கள் எதிர்கொள்ளவில்லை. இதனை ஒரு புதுமையான நிர்வாகமாகவே நாங்கள் பார்க்கின்றோம். இது தொடர்பாகவும் நாங்கள் எமது மட்டக்களப்பு மக்களுக்கு எவ்வாறான சேவைகளை செய்து கொண்டிருக்கின்றோம் என்பது பற்றியும் கூறியிருந்தோம்.
சிறுவர் சிநேக நகர அபிவிருத்திச் செயற்பாடுகள் பற்றியும் அதற்கான நிதியுதவிகளை எவ்வாறு நாங்கள் பெற்றுக்கொண்டிருக்கின்றோம் என்பது சம்பந்தமாகவும் கலந்துரையாடியிருக்கின்றோம்.
சிறுவர் சிநேக நகர அபிவிருத்திச் செயற்பாட்டிற்கு ஒரு முழு அளவிலான சிறுவர் பூங்காவை அவர்களிடம் கோரியிருக்கின்றோம். அதற்கு சாதகமான பதில் எங்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கின்றோம்.
இன்று நடைபெற்ற விவசாயிகளின் ஆர்ப்பாட்டங்கள் சம்பந்தமாகவும் அவர் எங்களிடம் கேட்டிருந்தார். இந்த ஆர்ப்பாட்டத்தினை பொலிஸார் எவ்வாறு தடுத்தார்கள் என்பதையும் அவர்களது தடுப்பினையும் மீறி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தமை பற்றி நாங்கள் கூறியிருந்தோம்.
உண்மையில் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டமானது மக்களால் அங்கீகரிக்கப்பட்ட காலத்தின் தேவையான ஒரு ஆர்ப்பாட்டமாக இருக்கின்றது. இந்த விவசாயிகளை நட்டாற்றில் விடுவதற்காகவா 69 இலட்சம் மக்கள் வாக்களித்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாக்களித்து துர்ப்பாக்கிய நிலைக்கு எங்களை கொண்டு சென்றிருக்கின்றார்கள்.
இந்த அரசாங்கத்தின் இவ்வாறான
செயற்பாடுகளை தொடர்ச்சியாக நாங்கள் அனுமதித்தால் மக்கள் பட்டினிச்சாவை
எதிர்நோக்க நேரிடும் என தெரிவித்துள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க "இராஜ ட்ரோன் நீர்மூழ்கி" கப்பலை வடிவமைத்த பிரித்தானியா News Lankasri
