மட்டக்களப்பில் ஐஸ்வகை போதைப்பொருளை உட்கொண்ட இளைஞரொருவர் பலி
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யாசின்வாவா வீதி, மாவடிச்சேனை பிரதேசத்தில் ஐஸ்வகை போதைப்பொருளை உட்கொண்ட இளைஞரொருவர் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாவடிச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த (27) வயதுடைய ஜனுதீன் முஹம்மது நிஜாம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்துத் தெரியவருகையில்,
குறித்த நபர் தடை செய்யப்பட்ட ஐஸ்வகை போதைப்பொருளை உட்கொண்டு மயக்கமுற்ற நிலையில், அருகில் உள்ள வாழைச்சேனை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.
இதன்போது மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
மட்டக்களப்பு நீதிமன்ற பதில் நீதிவான் அவர்களின் உத்தரவிற்கமைவாக சம்பவ இடத்திற்குச் சென்ற காத்தான்குடி பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி வேலு மணிமாறன் சடலத்தைப் பார்வையிட்ட பின்னர், சடலத்தைப் பிரேதப் பரிசோதனையின் பின் உறவினர்களிடம் ஒப்படைக்கும்படி உத்தரவிட்டார்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி ஏ.இளங்கோவன் அவர்களினால் இன்று மேற்கொள்ளப்பட்ட பிரேதப் பரிசோதனையில், குறித்த இளைஞன் அதிகமான ஐஸ்வகை போதைப்பொருளை உட்கொண்டமையால் உயிரிழந்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார்
மேற்கொண்டு வருகின்றனர்.