மட்டக்களப்பு மாவட்டத்தில் 24 மணித்தியாலத்தில் 21 கோவிட் தொற்றாளர்கள்
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் 21 கோவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில் இரண்டு மரணங்களும் சம்பவித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் 21 கோவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில் இரண்டு மரணங்களும் சம்பவித்துள்ளன.
இந்த 21 பேரில் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினை சேர்ந்த 8 பேரும், வெல்லாவெளி, ஓட்டமாவடி, செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தலா மூன்று பேரும், காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவரும், கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவரும், களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இருவருமாக மொத்தம் 21 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மரணித்த இருவரும் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவினை சேர்ந்தவர்களாவர். மரணித்த இருவரும் 69 வயதினைச் சேர்ந்த ஆண்களாவர். மட்டக்களப்பு மாவட்டத்தில் மொத்தமாக 1209 பேர் கோவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மொத்தமாக 13மரணங்கள் சம்பவித்துள்ளன. 210 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 988 பேர் குணமடைந்து வீடு சென்றுள்ளனர்.
கோவிட் - 19 மூன்றாவது அலையில் 16 நாட்களில் இதுவரை 226 பேர் கோவிட் -19 தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடைசி 7 நாட்களில் 135 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த 16 நாட்களில் மூன்று மரணங்கள் சம்பவித்துள்ளன. தேசிய ரீதியில் இறப்பு வீதமானது 1 வீதத்திற்கும் குறைவாகக் காணப்படுகின்றது. ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் இறப்பு வீதமானது 1 வீதத்திற்கும் அதிகமாகக் காணப்படுகின்றது.
பொதுமக்கள் கோவிட் - 19 மூன்றாவது அலையின் பாரிய பாதிப்பை உணர்ந்து சுகாதார முறைகளைச் சரியாகப் பின்பற்றிக் கொள்ளவும். நோன்பு காலத்தில் ஒன்றுகூடல்களை முற்றாகத் தவிர்த்துக் கொள்ளவும். முகக் கவசங்களை அணிந்துகொள்ளவும்.
முகக்கவசம் அணியாதவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். சுகாதார அமைச்சு கூறியதன்படி கோவிட் - 19 தொற்றாளர்களுக்காக 100 கட்டில்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் உருவாக்கப்பட வேண்டும்.
ஆனால் தற்போது 400 கட்டில்கள் மாத்திரமே தயார் நிலையில் உள்ளது. அதற்காக எமது அடுத்த திட்டமிடலாக இரண்டு பிரதேச வைத்தியசாலைகள் கோவிட் வைத்தியசாலைகளாக மாற்றப்படவுள்ளன.
மற்றும் இரண்டு ஆதார வைத்தியசாலைகளில் சில பிரிவுகள் கோவிட் தொற்றாளர்களுக்காக ஒதுக்கப்படவுள்ளது. அடுத்த ஒருமாத காலத்திற்குள் கட்டில்களின் எண்ணிக்கையை 700ஆக அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளோம் என தெரிவித்துள்ளார்.