மட்டக்களப்பு ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள்
மட்டக்களப்பு - மண்முனை தெற்கு, எருவில் பற்று (களுவாஞ்சிகுடி) பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் களுவாஞ்சிகுடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
இந்தக் கூட்டமானது நேற்று(02.09.2026) நாடாளுமன்ற உறுப்பினருமான கந்தசாமி பிரபு தலைமையில் இடம்பெற்றுள்ளது.
அபிவிருத்திப் பணிகள்
இந்த கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், இ.சிறிநாத், மண்முனை - தெற்கு, எருவில் பற்று பிரதேசசபையின் தவிசாளர் எம்.வினோராஜ் உட்பட பலர் கலந்துகொண்டுள்ளனர்.
அத்துடன் திணைக்களங்களின் தலைவர்கள்,பாதுகாப்பு துறையினர்,பிரதேசசபை உறுப்பினர்கள்,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டுள்ளனர்.

இந்தக் கூட்டத்தின்போது பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு அபிவிருத்திப் பணிகள், நிலுவையில் உள்ள திட்டங்கள் மற்றும் பொதுமக்களின் அவசரப் பிரச்சினைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டு பல முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பிரதேசத்தில் 281 மில்லியனுக்கும் அதிகமான நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள் தற்போது 100வீதம் பூர்த்தியடையும் கட்டத்தை எட்டியுள்ளதாக இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் பிரச்சினைகள்
அதேவேளை, இளைஞர்களை பாதிக்கும் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் அதிக வேகம் காரணமாக ஏற்படும் வீதி விபத்துகளைக் கட்டுப்படுத்த பொலிஸாருக்குத் தெளிவான வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளன.
அத்துடன் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடுபவர்களைக் கைது செய்யவும், விதிமுறைகளை மீறி அதிவேகமாகச் செல்லும் சாரதிகளுக்கு எதிராகத் தொடர்ச்சியான கண்காணிப்புகளை மேற்கொண்டு சட்ட நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

களுவாஞ்சிகடி வைத்தியசாலையின் கழிவகற்றல் 15 நாட்களுக்கும் மேலாக மேற்கொள்ளப்படவில்லை என்ற முறைப்பாடு தொடர்பில் பிரதேச சபைக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும், வைத்தியசாலையின் செயற்கை கருத்தரிப்பு மையத்தின் செயல்பாடுகள் மந்தகதியில் இருப்பது குறித்தும், சேவைக்குரிய கொடுப்பனவுகள் வழங்கப்பட்டும் முறையான சேவைகள் கிடைக்கவில்லை என்பது குறித்தும் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கி விரைவில் தனிக் கூட்டமொன்றைக் கூட்டித் தீர்வு காணத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.