மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் விஜயம்
உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதல் இடம்பெற்று நாளை 21 ம் திகதி இரண்டாவது ஆண்டு தினத்தையிட்டு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் காவிந்த ஜயவர்தன, ஹெக்டர் அப்புஹாமி ஆகியோர் மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டு உள்ளனர்.
இவ்விஜயம் இன்று செவ்வாய்க்கிழமை (20) இடம்பெற்றதுடன், அவர்களால் உயிரிழந்தவர்களுக்குச் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் தற்கொலைக் குண்டு தாக்குதலால் 31 பேர் உயிரிழந்ததுடன், 70 மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அத்துடன் தேவாலய கட்டிடம் பலத்த சேதமடைந்தது.
இந்த தேவாலயத்தின் புனர்நிர்மானப்பணிகளை இராணுவத்தினர் மேற்கொண்டுவந்தனர். இருந்தபோதும் கடந்த 2020 டிசம்பர் மாதத்திலிருந்து இராணுவத்தினர் புனர்நிர்மான பணிகளை இடைநடுவில் கைவிட்டுவிட்டு வெளியேறினர்.
குறித்த தேவாலயத்தில் குண்டு தாக்குதல் இடம்பெற்று நாளை 21 ம் திகதி இரண்டு வருடங்களாகியும் புனர்நிர்மானப்பணிகள் பூர்த்தி செய்யப்படாமல் இடை நடுவில் கைவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த தேவாலயத்திற்கு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் கவிந்த ஜயவர்தனா, ஹெக்டர் அப்புஹாமி ஆகியோர் இன்று விஜயம் ஒன்றை மேற்கொண்டு தேவாலயத்தைப் பார்வையிட்டு பின்னர் அங்கு உயிரிழந்தவர்களின் நிழல் படங்களின் முன் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து தேவாலய பிரதம பேதகர் மகேசன் ரோசான் போதகருடன் கலந்துரையாடியதுடன், இந்த உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலுக்கு இலக்கான ஏனைய தேவாலயங்கள் நிர்மாணிக்கப்பட்டுக் கையளிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த தேவாலயம் மட்டும் புனர்நிர்மான பணிகள் இடைநடுவில் கைவிடப்பட்டுள்ளமை தொடர்பாக நாடாளுமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவரவுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தாக்குதல் சம்பவம் நடைபெற்று இரண்டு ஆண்டுகள் கடந்த போதிலும் முதல் தடவையாகத்
தாக்குதல் நடந்த ஆலயத்தில் இந்த ஆண்டுதான் ஆராதனை நடாத்தவுள்ளதாகவும்,
இந்த தாக்குதலுடன் தொடர்புபட்டவர்களை நீதியின் முன்பாக நிறுத்துவது
அரசாங்கத்தின் பொறுப்பு அதனை அவர்கள் செய்வார்கள் என நினைக்கின்றேன் எனவும்
சீயோன்
தேவாலயத்தின் பிரதம போதகர் ரொசான் மகேசன் தெரிவித்துள்ளார்.