பிரபல வங்கியில் பாரிய நிதி மோசடி
இலங்கையின் முன்னணி வணிக வங்கி ஒன்றில் பாரிய நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நிலையான வைப்பு கணக்கு (Fixed Deposit) வைத்திருந்த வாடிக்கையாளர் ஒருவரின் கணக்கிலிருந்து, 10 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான பணம் அவரது அனுமதியின்றி திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு எந்தவித முன்னறிவித்தலும் இன்றி, அவரது கணக்கிலிருந்த பணம் பல கட்டங்களாக வேறு நிதி நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது. தனது கைபேசிக்கு வந்த குறுஞ்செய்திகளை அவர் கவனிப்பதற்குள், சில வினாடிகளிலேயே ஒட்டுமொத்தப் பணமும் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக வங்கி நடத்திய உள்வாரி விசாரணையின் பின்னர், வங்கியின் கணினி அமைப்பில் எவ்வித கோளாறும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோசடிக்காரர்கள் வாடிக்கையாளரின் சரியான பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தியே உள்நுழைந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
வங்கியின் தரவுத்தளத்தில் பதிவு செய்யப்பட்ட அதே கைபேசி சாதனத்தின் ஊடாகவே இந்த கொடுக்கல் வாங்கல்கள் நடந்துள்ளன. வாடிக்கையாளரின் கைபேசியை வெளியார் எவராவது ஊடுருவி இந்த மோசடியைச் செய்திருக்கலாம் என வங்கி சந்தேகம் வெளியிட்டுள்ளது.
இந்த நிதி இழப்பிற்குத் தம்மால் பொறுப்பேற்க முடியாது எனத் தெரிவித்துள்ள வங்கி, இது குறித்துக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முறைப்பாடு செய்யுமாறு வாடிக்கையாளருக்கு அறிவுறுத்தியுள்ளது.