சீன நிறுவனங்களின் வெளிநாட்டு கிளைகளுக்கும் தடை: ஏஐ சிப் ஏற்றுமதி கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தும் அமெரிக்கா
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திற்கான மேம்பட்ட செமிகண்டக்டர் சிப்கள் சீனாவிற்குச் செல்வதைத் தடுக்கும் நோக்கில், அமெரிக்கா தனது ஏற்றுமதி கட்டுப்பாட்டு விதிகளை மேலும் கடுமையாக்கியுள்ளது.
சீனாவுக்கு வெளியே செயல்பட்டு வரும் சீன நிறுவனங்களின் துணை நிறுவனங்களுக்கும் இந்த ஏஐ சிப் ஏற்றுமதி தடை பொருந்தும் என்று அமெரிக்க வர்த்தக அமைச்சகம் புதிய விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் இந்த அதிரடி உத்தரவின் மூலம், சீனாவைத் தலைமையிடமாகக் கொண்டோ அல்லது சீனத் தாய் நிறுவனங்களின் கீழ் இயங்கும் உலகெங்கிலும் உள்ள அனைத்துப் பிரிவுகளுக்கும் அதிநவீன ஏஐ சிப்களை ஏற்றுமதி செய்ய இனி கட்டாயம் உரிமம் பெற வேண்டும் என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
நுண்ணறிவு பரவல் கட்டமைப்பு
முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகத்தின் 'செயற்கை நுண்ணறிவு பரவல் கட்டமைப்பு' கொள்கையை, தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் கடந்த மே மாதம் இரத்து செய்தது.

இதனால் முந்தைய ஏற்றுமதி கட்டுப்பாடுகளில் ஓட்டைகள் ஏற்பட்டு, சீன நிறுவனங்கள் வெளிநாட்டு கிளைகள் மூலம் சட்டப்பூர்வமாக சிப்களை வாங்கி வந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது.
இந்தச் சூழலில், பழைய கட்டுப்பாடுகள் இன்னும் அமலில் உள்ளனவா என்ற கேள்விக்கு, "ஆம், அவை தொடர்கின்றன" என்று அமெரிக்காவின் தொழில் மற்றும் பாதுகாப்பு பணியகம் (BIS) திட்டவட்டமாகப் பதிலளித்துள்ளது.
உலகின் முன்னணி சிப் தயாரிப்பு நிறுவனமான என்விடியா, அமெரிக்காவின் இந்த புதிய விளக்க வழிகாட்டுதலை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், தாங்கள் ஏற்கனவே இந்த விதிமுறைகளின்படியே செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
ஏஐ தொழில்நுட்ப ஆதிக்கத்திற்காக அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே போட்டி நிலவி வரும் வேளையில், அமெரிக்காவின் இந்த நடவடிக்கை சர்வதேச தொழில்நுட்ப சந்தையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.