சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாய நிலங்கள் : கலையரசன் எம்.பி விடுத்துள்ள வேண்டுகோள்
நெற்செய்கை அறுவடையை எட்டியுள்ள இக்காலகட்டத்தில் பெய்துள்ள பெருமழையின் காரணமாக நெற்செய்கைகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இக்காலத்தில் நட்டத்தை எதிர்நோக்கும் விவசாயிகளுக்கு நிவாரணங்களை வழங்கி அவர்களுடைய உற்பத்தியை அதிகரிப்பதற்குரிய பணிகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் இடம்பெற்ற பிரத்தியேக ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பயிர்ச் செய்கை பாதிப்பு
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
2024ஆம் வருடம் ஆரம்பித்திருக்கின்ற நிலையில் என்றுமில்லாதவாறு கிழக்கு மாகாணத்தில் பெரும் வெள்ள அனர்த்தம் ஏற்பட்டிருப்பதை அனைவரும் அறிவர். அம்பாறை மாவட்டத்தில் எந்தவொரு பயிர்ச்செய்கையும் பாதிப்புறவில்லை என்று சொல்லவே முடியாத நிலை.
குறிப்பாக மேட்டு நிலப்பயிர்களான சோளம், நிலக்கடலை போன்ற தானிய வகைகளும், மரக்கறி வகைகள் கூட அழிவுற்ற நிலையிலேயே இருக்கின்றது. இதனை நம்பி வாழ்கின்ற விவசாயிகள் பெரும் பாதிப்பினை அடைந்திருக்கின்றார்கள். பல நீரேந்தும் பகுதிகளின் வான்கதவுகள் திறக்கப்பட்டதன் காரணமாக அதிகமான விவசாய நிலங்கள் பெரும் சேதம் அடைந்துள்ளது.
நெற்செய்கை அறுவடையை எட்டியுள்ள இக்காலகட்டத்தில் பெய்துள்ள பெருமழையின் காரணமாக நெற்செய்கைகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நாவிதன்வெளி, சம்மாந்துறை, ஆலையடிவேம்பு, அக்கறைப்பற்று, திருக்கோவில், பொத்துவில் போன்ற பகுதிகள் மிக மோசமாகப் பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றன.
இன்றும் கூட நீர் வடிந்தோடாத நிலையில் அந்த வயல்நிலங்கள் இருக்கின்றன. இதனால் விவசாயிகள் பாரிய நட்டத்தை எதிர்கொள்ள இருக்கின்றார்கள். இந்த விடயத்தில் அரசாங்கம் உரிய கவனம் எடுக்க வேண்டும். பல முதலீடுகளை மேற்கொண்டு அறுவடை நெருக்கிக் கொண்டிருக்கும் இக்காலத்தில் நட்டத்தை எதிர்நோக்கும் விவசாயிகளுக்கு நிவாரணங்களை வழங்கி மேலும் அவர்களுடைய உற்பத்தியை அதிகரிப்பதற்குரிய பணிகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.
அந்த வகையிலே நாங்களும் இந்த விடயங்கள் தொடர்பில் அரசாங்கத்;திற்கு தெளிவூட்டல்களை மேற்கொள்வதுடன் அது தொடர்பான அறிக்கைகளையும் வழங்க இருக்கின்றோம். தற்போதைய நிலையில் இந்த அனர்த்தத்தின் காரணமாக தாழ்நிலப்பகுதிகளிலும், சில நகர்புறப் பகுதிகளிலும் உள்ள மக்கள் உணவுகள் அற்ற நிலையிலும் இருக்கின்றார்கள்.
கடந்த காலங்களில் எமக்கு புலம்பெயர் தேசத்தில் இருக்கின்ற உறவுகள் பல உதவிகளைச் செய்திருக்கின்றார்கள். தற்போதும் ஒரு சிலர் தங்களால் ஆன உதவிகளைச் செய்கின்றார்கள்.
இவ்வாறான உதவிகளைச் செய்வதன் ஊடாக தற்போதைய சூழலில் வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலையில் இருக்கின்ற அவர்களுக்கு தற்காலிகமாக கைகொடுத்து உதவ முடியும். இந்த நாட்டிலே தற்போது ஏற்பட்டிருக்கின்ற வெள்ள அனர்த்தமானது நீண்ட கால இடைவெளிக்குப் பின் ஏற்பட்டுள்ளது.
நாவிதன்வெளி கல்முனை நகரத்தை இணைக்கும் கிட்டங்கிப் பாலத்தின் குறுக்காக இன்று நான்கு நாட்களுக்கு மேலாக வாவி நீர் வடிந்தோடுவதன் காரணமாக நாவிதன்வெளி பிரதேச மக்களின் அன்றாட வாழ்வு விடயங்களை கல்முனை நகருக்குச் சென்று நிவர்த்தி செய்து கொள்ள முடியாமல் பாரிய சிரமங்களை அந்த மக்கள் எதிர்கொண்டிருக்கின்றார்கள்.
இந்தப் பாலத்தை அமைத்துத் தர வேண்டும் என்று எத்தனையோ அறிக்கைகள், எடுத்துரைப்புகளை மேற்கொண்டாலும் யாரும் அதனை செய்து தரக் கூடியவர்களாக இல்லை. எம்மால் மேற்கெபாள்ளப்பட்ட பலவிதமான முயற்சிகளும் வெற்றியளிக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



