இஸ்ரேலில் இலங்கையர் ஒருவரின் மோசமான நடத்தை..!
பணி நிமித்தம் இஸ்ரேல் சென்ற இலங்கையை சேர்ந்த ஒருவர் அங்கு சிக்கித் தவிப்பதாக சமூக ஊடகங்களில் வெளியாகும் காணொளி போலியானது என இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
குறித்த நபர், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அரசாங்க ஒதுக்கீட்டுத் திட்டத்தின் கீழ் கட்டுமானத் துறையில் பணிபுரிவதற்காக கடந்த ஒகஸ்ட் மாதம் இஸ்ரேல் வந்துள்ளார். 42 வயதான அந்த நபர் இஸ்ரேலுக்கு வந்து சிறிது நாட்களிலேயே அதிகமாக மது அருந்தத் தொடங்கியுள்ளார்.
தடுப்புக் காவல்
மேலும் தனக்கு ஒதுக்கப்பட்ட வேலைக்குச் செல்வதற்குப் பதிலாக பல்வேறு இடங்களில் அலைந்து திரிந்துள்ளார். இறுதியில் தனது பணியிடத்தையும் கைவிட்டுள்ளார்.
அந்த நபர் இலங்கையில் இருக்கும் போதும் மதுபாவனைக்கு அடிமையாக இருந்து பின்னர் மறுவாழ்வு பெற்றவர். இந்த விடயங்களை ஒகஸ்ட் 30 அன்று அவரது பெற்றோர் தூதரகத்திற்கு தெரியப்படுத்தியுள்ளார்.
மேலும், அவரை இலங்கைக்கு திரும்ப அனுப்புமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர். செப்டம்பர் 5, 2025 அன்று, அவர் ஜெருசலேமில் கண்டுபிடிக்கப்பட்டார். அவரது உடல்நிலை மோசமாக இருந்ததால் அவரை பொலிஸார் வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
அவர் இஸ்ரேலிய குடியேற்ற அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அன்றிரவே அவர் மருத்துவமனையிலிருந்து வெளியேறினார்.
செப்டம்பர் 16, 2025 அன்று மீண்டும் அவர் நெதன்யா பகுதியில் வைத்து பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டு பின்னர் நான்கு மணிநேரம் தற்காலிகமாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.
இஸ்ரேலிய மத அதிகாரிகள்
அவர் எந்தக் குற்றமும் செய்யாததால் பொலிஸார் அவரை விடுத்தனர். அதன் பிறகு மீண்டும் அவருக்கு உதவிய சமூக உறுப்பினர்களின் பராமரிப்பிலிருந்து அவர் தலைமறைவானார்.
செப்டம்பர் 17, 2025 அன்று பாத்தியம் பகுதியில் இருந்து அவர் காணொளியொன்றை பதிவு செய்து வெளியிட்டார். அவர் தற்போது தூதரகத்திற்கு அழைத்து வரப்பட உள்ளார்.
பின்னர், அவர் இஸ்ரேலிய மத அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார். இந்த விவகாரம் பொறுப்புடன் கையாளப்பட்டாலும், சமூக ஊடகங்களில் சில தவறான தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன.
அத்துடன், அவரது பெயர், கிராமம், கடவுச்சீட்டு விவரங்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிடுவது அவரது தனியுரிமையை மீறும் செயற்பாடு ஆகும் - எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




