தமிழர் காணியில் விகாரையை நிறுவ வேண்டியதன் பின்னணி என்ன..! ரவிகரன் எம்.பி கேள்வி
தமிழ் மக்கள் மனிதப்புதைகுழிகளுக்கான நீதியை கோருவதுடன், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி பேன்றவற்றிற்காகவும் தொடர்ந்து போராடி வருகின்றார்கள் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கருத்து தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
நல்லிணக்கம்
இதுவரை இவற்றுக்கு விடையில்லாத வரை நல்லிணக்கம் எப்படி மலரும் எனவும் கேள்வி எழுப்பியதுடன், இந்த தீவில் நல்லிணக்கம் மலராதவரை அபிவிருத்தி என்பது சாத்தியமில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு ஒட்டுமொத்த தீவிற்கும் பௌத்த சிங்கள முலாம் பூசுவதாலோ, வரி அறவீடுகளைச் செய்வதாலோ நாடு அபிவிருத்தி அடையாதெனவும் தெரிவித்துள்ளார்.
இந்த தீவின் பல்வகைமையை கண்ணியப்படுத்துவதுடன், இன நல்லிணக்கத்தை சீர் குலைக்கும் திணைக்களங்களை தூய்மைப்படுத்துமாறும், உற்பத்திப் பொருளாதாரத்தை வலுப்படுத்த ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை அவர்களிடமே ஒப்படைக்குமாறும் வலியுறுத்தியுள்ளார்.
சேர்பெறுமதி வரி (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு, சிறப்பு பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் இரண்டு கட்டளைகள் - அங்கீகரித்தல், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழ் விதிமுறைகள் - அங்கீகரித்தல் என்பவற்றை மையப்படுத்திய இன்றைய விவாதப்பொழுதிலே, அரசின் வருமானத்தை உயர்த்தவும் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் பண்டங்களின் இறக்குமதி மேலான கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளைக் கருத்திற் கொண்டும் அரசின் மேற்படியான சட்டமூலங்களும் விதிமுறைகளும் கட்டளைகளும் கொண்டுவரப்படுகின்றன.
வடக்கு மாகாணத்துக்கான அரசின் முதலீடுகள்
வடக்கு மாகாண தெங்கு முக்கோண வலயத்துக்கான இலங்கை அரசின் முதலீடுகள் வரவேற்புக்குரியன. எனினும் தென்னை மரங்களில் ஏற்படும் நோய்த்தொற்றுக்கு முழுமையான தீர்வை காண இயலாது வன்னி பெருநிலத்தின் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
தேங்காய் உற்பத்தியின் வீழ்ச்சியில் இது செல்வாக்குச் செலுத்துகின்றது. இவற்றை எதிர்கொண்டு நிலைபேறான விளைச்சலுக்காக தென்னை அபிவிருத்தி சபை கூடுதல் ஆய்வு முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும்.

சோளத்தின் மீது அதிகரிக்கப்பட்டுள்ள விசேட வர்த்தகப் பண்ட வரியால் விலங்குத் தீவனங்கள் மற்றும் பண்ணை சார் உற்பத்திப்பொருள்களின் விலை உயர்வடைந்து மீண்டும் அடித்தட்டு மக்களுக்கு அவை சுமையாகாத வகையில் இருப்பதையும் அரசு உறுதிப்படுத்த வேண்டும்.
சேர்பெறுமதி வரி(திருத்தச்) சட்டமூலத்தின் ஊடான திருத்தங்களால் ஏற்படும் விளைவு அதிர்வுகள், அடித்தட்டு மக்கள் மற்றும் சிறுவணிகதாரர்களின் இயல்பொழுங்கில் அதீத நெருக்கீட்டை ஏற்படுத்தாதிருக்க, திருத்தங்களின் தொடர் ஏற்பாடுகள் மீதும் அரசு கவனங் கொள்ளவேண்டும்.
முக்கியமாக விற்றுமுதல் எல்லை குறைப்பு, விற்பனை முனைப் பொறிகளைக் கட்டாயமாக்கல் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம், சிங்கப்பூர், தென்னாபிரிக்கா, இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளை விடவும் மிகவும் இறுக்கமாக இங்கு நடைமுறைப்படுத்தப்படும் இந்த நிதிச் சேவைகளுக்குரிய வரி உயர்வு வணிகதாரர்களையும் நிதிநிறுவனங்கள் ஊடாக சேவை பெறும் மக்களையும் பாதிக்கக்கூடியன.
நிதி நிறுவனங்கள் மீதான சுமை
நிதி நிறுவனங்கள் மீது வைக்கப்படும் மேற்படியான சுமை, சங்கிலித் தொடராக மக்களிடமே மீண்டும் மடைமாற்றம் செய்யப்படக்கூடியன. வரி ஏய்ப்புகளை முறைப்படுத்தல், உற்பத்திப் பொருளாதாரத்தை மேம்படுத்தல், சட்டவிரோத நடைமுறைகளை கட்டுப்படுத்தல், நிருவாக மட்டங்களை வலுப்படுத்தல், நோக்கத்தை தொலைத்து கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் பங்குதாரர்களாக செயற்படும் தொல்லியல் திணைக்களம், மகாவலி அதிகார சபை, வனவளத்துறை, வன உயிரிகள் திணைக்களம் என்பவற்றை நோக்கத்திற்கேற்ப வழிப்படுத்தல் என்பவற்றிலும் அரசு கவனம் கொள்ள வேண்டும்.
கொக்குத்தொடுவாயில் தனியார் காணியில் அத்துமீறி உப்பளம் அமைக்க கொடுப்பதா மகாவலி அதிகார சபையின் வேலை? அல்லது தமிழர் விளை நிலங்களுக்கு குறுக்காக வேலி போடுவதா அதன் வேலை?
நீதிமன்ற உத்தரவுகளை புறந்தள்ளி, வெளிப்படையான ஆய்வுகளைப் புறந்தள்ளி, படையினர், பொலிஸாரின் பாதுகாப்போடு இரகசியமாக தமிழர் தொல்லியல் அடையாளங்களை சிதைப்பதா தொல்லியல் திணைக்களத்தின் வேலை? முற்றுமுழுதாக இராணுவப் பாதுகாப்பிற்குள் இருந்த குருந்தூர் மலையில், நாங்கள் வழிபட்டு வந்த அந்த சூலத்தை திருடியது யார்?
இவ்வாறான தமிழர் வழிபாட்டு அடையாளங்களை திருடுவது தான் படையினர் பணியா? சிங்கள பௌத்தர் இல்லாத கொக்கிளாயில் விகாரையை - அதுவும் தமிழர் காணியில் நீங்கள் நிறுவ வேண்டியதன் பின்னணி என்ன?
வெட்டு வாய்க்கால் விகாரைக்குரிய பின்னணி
சிங்களவர்களே வாழாத வெட்டு வாய்க்காலில் நீங்கள் கட்டிய அந்த விகாரைக்குரிய பின்னணி என்ன? அங்கு புத்தர் பெருமான் வருகை தந்தாரா? அல்லது சிங்கள பௌத்தர்கள் வசித்தனரா? இவற்றை எல்லாம் நிறுவி, இனி எப்படி எல்லாம் வரலாற்றை மாற்றப்போகிறீர்கள்!
நாட்டின் அபிவிருத்தியை வரி அறவீடுகளால் மட்டும் கண்டுவிடமுடியாது. ஒட்டுமொத்த தீவையும் பௌத்த சிங்கள முலாம் பூசுவதன் ஊடாகவும் கூட ஏற்படுத்தி விடமுடியாது.

இந்தத் தீவின் பல்வகைமையை கண்ணியப்படுத்துங்கள். இன நல்லிணக்கத்தை சீர் குலைக்கும் திணைக்களங்களை தூய்மைப்படுத்துங்கள்.
உற்பத்திப் பொருளாதாரத்தை வலுப்படுத்த எங்களின் நிலங்களை எங்களிடம் தாருங்கள். இன்றளவில் 400ஐ தாண்டும் எங்கள் உறவுகள் என்புகளாகி செம்மணியில் இன்றும் சாட்சிகளாக நீதிக்காக காத்திருக்கிறார்கள்.
மறுபுறம் எங்களுக்காக உடன் நின்றவர்கள் சிறையில் அரசியல் கைதிகளாக விடுதலைக்காக காத்திருக்கிறார்கள். உங்களிடம் நம்பி ஒப்படைத்து இன்றளவும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களாக நாம் தேடிக்கொண்டிருக்கும் எங்கள் உறவுகளைத் தாருங்கள்.
இவற்றுக்கு விடையில்லாத வரை நல்லிணக்கம் எப்படி மலரும். நல்லிணக்கம் மலராத வரை தீவிலே அபிவிருத்தி எவ்வாறு விளையும்! இந்தத் தீவிலும் கூட, நீதி என்பது அனைவருக்குமானதாக இருக்க வழி செய்யுங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
தலைவர் 173 திரைப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு Cineulagam
உங்க குடும்பம் எங்கே சார்? முதல்வர் விஜய்க்கு ‘பர்சனல்’ கவுண்டர்! இணையத்தில் சூடுபிடிக்கும் இருதரப்பு மோதல் Manithan