பதுக்கி வைத்து பொருட்களை விற்பனை செய்வதை தவிர்க்க வேண்டும்: கணபதிப்பிள்ளை மகேசன்
தற்போதுள்ள பொருளாதார நெருக்கடி நிலையில் பொருட்களைப் பதுக்கி வைத்து அதிக விலைக்குப் பொருட்களை விற்பனை செய்பவர்களிடம் பொருட்களைக் கொள்வனவு செய்வதை பொது மக்கள் தவிர்க்க வேண்டும் என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.
யாழ்.மாவட்ட செயலகத்தில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
அதிக விலைக்கு எரிபொருள் விற்றல்
''நாடு முழுவதும் பதுக்கி வைக்கப்பட்டுள்ள எரிபொருள் மற்றும் அதிக விலைக்கு அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்வது தொடர்பில் பாவனையாளர் அதிகார சபையினர் மற்றும் பொலிஸார் இணைந்து சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதேபோல யாழ்.மாவட்டத்தில் கடந்த வாரம் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
எனவே தற்போதைய சூழ்நிலையைப் பயன்படுத்தி சிலர் பொருட்களை அதிகளவில் கொள்வனவு செய்து பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்யக்கூடும். எனவே அவர்களுக்குப் பொதுமக்கள் ஒத்துழைப்பினை வழங்கக்கூடாது.
மக்களிடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை
பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்பவர்களுக்குப் பொதுமக்கள் உடந்தையாக இருக்கக்கூடாது. அவ்வாறு அவர்களிடமிருந்து பொருட்களைக் கொள்வனவு செய்வதில் மக்கள் அவதானமாகச் செயற்பட வேண்டும்.
மேலும் யாழ்ப்பாணக் குடநாட்டிற்குத் தேவையான எரிபொருளின் அளவு முன்னரை விட அதிக அளவில் யாழ்ப்பாண மாவட்டத்திற்குக் கிடைப்பதாகவும், எனினும் மேலதிகமாக கிடைக்கும் எரிபொருள் எங்கே செல்கின்றது என்பது தெரியவில்லை.
மண்ணெண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் தற்போது பிரச்சினையாகக்
காணப்படுவதாகவும் அதற்குரிய தீர்வு விரைவில் கிடைக்கும்'' எனவும் குறிப்பிட்டுள்ளார்.



