எரிபொருள் விலைகளில் நிவாரணம் கிடைக்கும் சாத்தியம்: இராஜாங்க அமைச்சர் தகவல்
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம், லங்கா ஐ.ஓ.சி. மற்றும் சினோபெக் நிறுவனங்களுக்கு இடையில் போட்டி இருப்பதால் இதன்மூலம் இனிவரும் காலங்களில் எரிபொருள் விலைகளில் மக்களுக்கு சிறந்த நிவாரணம் கிடைக்கும் என நம்புவதாக மின்சக்தி மற்றும் வலு சக்தி இராஜாங்க அமைச்சர் டீ.வி.சானக குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்றைய தினம் (08.02.2024) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மீதப்படுத்தப்பட்டுள்ள டொலர்
அவர் மேலும் குறிப்பிடுகையில், சினோபெக் நிறுவனத்துக்கு எரிபொருள் விநியோக நடவடிக்கைகளுக்கு அனுமதியளிக்கப்பட்டமையால், எரிபொருள் இறக்குமதிக்காக வருடாந்தம் செலவிடப்படும் 500 மில்லியன் டொலரை அரசாங்கத்தால் மீதப்படுத்த முடிந்துள்ளது.
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம், லங்கா ஐ.ஓ.சி. மற்றும் சினோபெக் ஆகிய நிறுவனங்களுக்கு இடையில் போட்டி காணப்படுகிறது. இதன்மூலம் இனிவரும் காலங்களில் எரிபொருள் விலைகளில் மக்களுக்கு சிறந்த நிவாரணம் கிடைக்கும் என்று நம்புகின்றோம்.
தற்போது அமெரிக்காவின் ஆர்.எம். பார்க் நிறுவனம் 3 மில்லியன் டொலரை வைப்பு செய்துள்ளது. அனுமதிப்பத்திர கட்டணமாக 2 மில்லியக் டொலரும், நிலையான வைப்பாக 1 மில்லியன் டொலரும் இவ்வாறு வைப்பு செய்யப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவின் யுனைடட் பெட்ரோலிய நிறுவனம்
எனவே விரைவில் இந்த நிறுவனம் அதன் நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்கின்றோம். ஆனால் அவுஸ்திரேலியாவின் யுனைடட் பெட்ரோலிய நிறுவனம் கால அவகாசம் கோரியுள்ள போதிலும், எவ்வித வைப்புக்களையும் பேணவில்லை.
எனவே இந்த நிறுவனம் செய்து கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்துக்கமைய செயற்படாவிட்டால், இந்த திட்டத்திலிருந்து அதனை நீக்கி விட்டு, ஏனையோருக்கு வாய்ப்புக்களை வழங்குவதற்கு அமைச்சு மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இது தொடர்பில் ஆராய்ந்து குறித்த நிறுவனத்தை நீக்குவதற்கு எதிர்பார்த்துள்ளோம் என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |