சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை விடுவிக்குமாறு கோரிக்கை
இலங்கையின் மனித உரிமை சட்டத்தரணியை விடுவிக்குமாறும், அவரை 15 மாதங்கள் தடுத்து வைக்க பயன்படுத்தப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்களை ரத்து செய்யுமாறும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை விடுவிக்குமாறு சர்வதேச மன்னிப்பு சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம் மற்றும் சர்வதேச நீதிபதிகள் ஆணையம் உள்ளிட்ட 11 உரிமைகள் குழுக்கள் இலங்கையை வலியுறுத்தியுள்ளன.
ஹிஸ்புல்லாவின் தடுத்து வைத்தல் விடயம், இந்த ஆண்டு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை மற்றும் ஐரோப்பிய நாடாளுமன்றத்தாலும் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கையின் கடுமையான பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் உரிய செயல்முறை இல்லாமல் மிக நீண்ட காலம் தடுத்து வைக்கப்பட்டுள்ள பலரில் ஹிஸ்புல்லாவும் ஒருவர் என்று உரிமைக் குழுக்கள் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளன.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டம், நீதித்துறை மறு ஆய்வு இல்லாமல் நீண்டகாலமாக ஒருவரை தடுத்து வைக்க அனுமதிக்கிறது.
இந்தச் சட்டத்தை ரத்து செய்வதற்கான உறுதிமொழிகள் இருந்தபோதிலும், தன்னிச்சையான தடுப்புக்காவலை செயல்படுத்த இலங்கை தொடர்ந்தும் இந்த சட்டத்தை பயன்படுத்துவதாக மனித உரிமைக்குழுக்கள் தெரிவித்துள்ளன.