சட்ட மா அதிபர் திணைக்களம் தமிழ் மொழியை புறக்கணித்துள்ளதா?
நாட்டின் சட்ட மா அதிபர் திணைக்களம் தேசிய மொழிகளில் ஒன்றான தமிழ் மொழியை புறக்கணித்துள்ளதாக சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
அண்மையில் சீன உதவியுடன் நிர்மானிக்கப்பட்ட சட்ட மா அதிபர் திணைக்கள புதிய கட்டடம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
இதன்போது கட்டடத்தின் நூலகப் பிரிவு குறித்த பெயர்ப் பலகையில் ஆங்கிலம், சிங்களம் மற்றும் சீன மொழிகளில் காணப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் பெயர்ப் பலகையில் இலங்கையின் தேசிய மொழிகளில் ஒன்றான தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, இந்த புகைப்படம் தொடர்பில் சமூக ஊடங்களில் வெளியிடப்பட்டுள்ள கருத்துக்களுக்கு இலங்கைக்கான சீனத்தூதரகம் பதிலளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சட்ட மா அதிபர் திணைக்களத்தின் உள்ளக ஈ நூலகமொன்றுக்கு சீன அரசாங்கம் நிதி உதவி வழங்கியதாகவும் அதற்கு நன்றி பாராட்டும் வகையில் பெயர்ப் பலகையில் சீன மொழி உள்ளடக்கப்பட்டுள்ளது எனவும் சீன தூதரகம் பதிலளித்துள்ளது.
ஏற்கனவே கொழும்பு துறைமுக நகரின் ஓர் பகுதியில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டமை நாடாளுமன்றிலும் விமர்சனம் செய்யப்பட்ட நிலையில், சட்ட மா அதிபர் திணைக்களத்தின் நூலக பெயர்ப் பலகை மீண்டும் சர்ச்சையை எற்படுதுதியுள்ளது.
எவ்வாறெனினும், இந்த சர்ச்சை தொடர்பில் இலங்கை அரசாங்கத் தரப்பில் இதுவரையில் எவ்வித பதில்களும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
