தமிழின அழிப்பிற்கு நீதி கோரி ஐ.நா முன்றலில் கவனயீர்ப்பு
தமிழின அழிப்பிற்கு நீதி கோரும் கவனயீர்ப்புப் போராட்டமானது, ஐக்கிய நாடுகள் மனித உரிமை மன்றத்தின் ஜெனீவா தலைமையக வளாகத்தில் அமைந்திருக்கும் ஈகை பேரொளி முருகதாசன் திடலில் இடம்பெற்றுள்ளது.
பேரெழுச்சியுடன் குறித்த கவனயீர்ப்பு 03.03.2025 அன்று நடைபெற்றுள்ளது.
இப்போராட்டமானது, சிறிலங்கா அரசு திட்டமிட்டு நடாத்திவரும் தமிழின அழிப்பிற்கு அனைத்துலக நீதிகோரியும், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழீழம் விடுவிக்கப்படவேண்டும் என்பதனை வலியுறுத்தியும் ஐரோப்பாவாழ் தமிழ் மக்களின் ஒன்றிணைவுடன் உணர்வெழுச்சியோடு நடைபெற்றதாக ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் அரசியற்பிரிவினராலும், சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பாலும் ஐ.நா மன்றத்தின் இலங்கையின் மனித உரிமையை கண்காணிக்கும் உறுப்பினர்களிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
அவர்களுடன் தொடர்ந்து 30 நிமிடங்கள் வரை, இதுவரை தாயகத்திலும் மற்றும், தாயகம் திரும்பும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினை பற்றி கலந்துரையாடப்பட்டுள்ளது.
அத்துடன் தாங்கள் தொடர்ந்தும் இலங்கையில் நடந்து வரும் மனித உரிமை மீறலுக்கு எதிராக குரல் கொடுப்பதாகவும் போராட்டகாரர்கள் கூறியிருந்தனர்.
அது மாத்திரமின்றி அவர்கள் எம்மை தொடர்ந்து நாங்கள் வாழுகின்ற நாடுகளில் அதிக மக்களைத் திரட்டி எமது உரிமைக்கான குரல்களை எழுப்புமாறும், மற்றும் அந்த நாட்டு வெளிவிகார அமைச்சர்களிடம் தொடர்புகளைப் பேணுமாறும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

