உயிரிழந்த சிறுமிக்கு நீதிக்கோரி முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டம்
முல்லைத்தீவில் சிறுவர்கள், பெண்களுக்கு எதிரான வன்முறைகளைக் கண்டித்து கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட றெட்பானா உள்ளிட்ட நான்கு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் சிறுமியின் உயிரிழப்பிற்கு நீதி கோரியும், பெண்களுக்கு எதிரான வன்முறைகளைக் கண்டித்தும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்துள்ளனர்.
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாரதி வட்டார இணைப்பாளர் வே.தியாகராசா ஒழுங்கமைப்பில் முன்னெடுக்கப்பட்ட இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் மாணிக்கபுரம், இளங்கோபுரம், வள்ளுவர்புரம், பாரதிபுரம் கிராமத்தினை சேர்ந்த மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தினர் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மக்கள் பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.
சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவோர் மீது சட்ட நடவடிக்கை எடு, சிறுவர்களை வேலைக்கு அமர்த்தாதே, துஷ்பிரயோகத்தினால் உயிரிழந்த சிறுமிக்கு நீதி கிடைக்கவேண்டும், கொலை செய்தவர்களுக்குத் தண்டனை கிடைக்கவேண்டும் போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை தாங்கியவாறு கவனயீர்ப்பு நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளார்கள்.
குறித்த போராட்டத்தின் நிறைவில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோநோகராதலிங்கத்திடமும் அரசாங்க அதிபருக்குமான மனு கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.