கொத்தலாவல சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹட்டன் நகரில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்
கல்வியை விற்பனை செய்வதற்காகக் கொண்டு வந்துள்ள இராணுவ நிர்வாகத்தை நிறுத்து, இலவச கல்வியை ஒழிப்பதற்காக இராணுவ இயந்திரத்தை அமைத்து தற்காலிகமாகச் சுருட்டிக்கொண்ட கொத்தலாவல சட்டத்தை முழுமையாக எதிர்ப்போம் எனக் கோரிக்கை விடுத்து ஹட்டன் நகரில் கொத்தலாவல பிரேரணைக்கு எதிரான கூட்டு நிலைய செயற்பாட்டாளர்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணியை நடத்தியுள்ளனர்.
ஹட்டனில் இன்று காலை ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆசிரியர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என நூற்றுக்கு அதிகமானோர் கலந்து கொண்டுள்ளனர்.
இவர்கள் தங்களது கோரிக்கைகளை பதாதைகள் ஊடாக வெளிப்படுத்தி அதை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பிக் கொண்டு பேரணி ஒன்றையும் முன்னெடுத்துள்ளனர்.
இந்த பேரணி புட்சிட்டி அருகில் ஆரம்பமாகி ஹட்டன் நகர மத்தியில் அமைந்துள்ள மணிக்கூட்டுக் கோபுரத்துக்கு அருகில் ஒன்றிணைந்தது.
அவ்விடத்தில் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் கொத்தலாவல சட்ட மூலத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பியதுடன், ஆசிரியர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் மற்றும் போராட்டங்கள், கைது நடவடிக்கைகள் ஆகியவற்றை வெளிக்கொணர்ந்து முழக்கங்களை எழுப்பியுள்ளனர்.