பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் கொலை முயற்சி - வழக்குக்களின் விசாரணைகளை துரிதப்படுத்திய கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி
பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் கொலை முயற்சி தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கனகரத்தினம் ஆதித்தியனுக்கு எதிராக பயங்கரவாதத்தடைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் மேலதிக விசாரணையை நடாத்தத் தீர்மானித்து அரச சாட்சிகளுக்கு அழைப்பாணை அனுப்ப கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.வை.எம் இஸடீன் பதிவாளருக்குக் கட்டளையிட்டுள்ளார்.
இந்த வழக்கு தொடர்பில் தெரியவருகையில்,
பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராகிய பசீர் வலி மொகமட் என்பவரைக் கொலை செய்யச் சதித்திட்டம் தீட்டி 2006 ம் ஆகஸ்ட் மாதம் 14 ஆந் திகதி நடாத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் இராணுவப் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த ஏழு இராணுவ அதிகாரிகளுக்கு மரணத்தை ஏற்படுத்தியதுடன், மேலும் பத்து பொதுமக்களுக்கு கடும் காயத்தை ஏற்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு கனகரத்தினம் ஆதித்தன் மற்றும் இருவருக்கும் எதிராகக் கொழும்பு மேல் நீதிமன்றில் சட்டமா அதிபரினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் கைதியான கனகரத்தினம் ஆதித்தியன் சார்பில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா தனது சமர்ப்பணத்தில் பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் கொலை முயற்சி வழக்கில் 12 வருடங்களாக மகர சிறைச்சாலையில் தடுப்புக்காவலில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஒரே அரசியல் கைதியான, இந்த வழக்கின் எதிரியான கனகரத்தினம் ஆதித்தனுக்கு எதிராக ஒரேயொரு குற்ற ஒப்புதல் வாக்கு மூலத்தை அடிப்படையாகக் கொண்டு சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்குக்களான முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு செயளாளர் கோட்டாபய ராஜபக்ச, இராணுத்தளபதி சரத் பொன்சேகா ஆகியோரை கொலை செய்யச் சதித்திட்டம் தீட்டியதாகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் எனது வாதத்தையடுத்து கனகரத்தினம் ஆதித்தியன் 2018ம் ஆண்டு இந்த நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டார்.
பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் கொலை முயற்சி கனகரத்தினம் ஆதித்தியனுக்கு எதிராகச் சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட மற்றைய வழக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் கொலை முயற்சி வழக்கு இந்நீதிமன்றில் 2019ம் ஆண்டு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
கனகரத்தினம் ஆதித்தனுக்கு எதிராக முக்கிய சான்றாக இந்த வழக்கில் முன்வைக்கப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலம் இந்த நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்ட நிலையில், சட்டமா அதிபர் 65 சாட்சியாளர்களை அரச சாட்சியாகப் பட்டியலிட்டு சாட்சியாளர்களுக்கு அழைப்பாணை அனுப்பும்படி இந்த நீதிமன்றில் வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.
குற்ற ஒப்புதல் வாக்குமூலம் இந்த நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்ட பின்னர் 2019ம் ஆண்டிலிருந்து கடந்த இரண்டு வருடங்களுக்கு மேல் இந்த வழக்கின் மேலதிக விசாரணைக்கு பல தவணை வழங்கப்பட்டதெனினும் சாட்சிகள் நீதிமன்றில் சமூகமளிக்காமையாலும், கடந்த வருடத்திலிருந்து கோவிட் -19 காரணமாகவும் இரண்டு வருடங்கள் கடந்து விட்டது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகளில் 12 வருடங்களாகப்
பாதுகாப்பு அமைச்சரின் உத்தரவின் கீழ் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஒரே
ஒரு அரசியல் கைதி கனகரத்தினம் ஆதித்தியனான இந்தக் கைதி மட்டுமேயென தனது சமர்ப்பணத்தை
முன்வைத்ததுடன், இந்த வழக்கினை விசாரணைக்காக திகதியிடும்படி வேண்டிக்கொண்டதையடுத்து மேல்
நீதிமன்ற நீதிபதி மொகமட் இஸடீன் அரச சாட்சிகளுக்கு அழைப்பாணை அனுப்பப்
பதிவாளருக்குக் கட்டளையிட்டு மேலதிக விசாரணைகளை ஆடி மாதம் 19,22,26,27மற்றும்
28ம் திகதிகளுக்கு ஒத்திவைத்துள்ளார்.