பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல்: வலுக்கும் எதிர்ப்புகள் (Video)
கிழக்கு மாகாணத்தில் வாயில்லா ஜீவன்களுக்காக ஜனநாயக வழியில் போராடச் சென்ற வடக்கு, கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தமிழர்கள் மீது சிங்கள பேரினவாதத்தின் அடக்குமுறை தொடர்வதை காட்டி நிற்பதாக பொத்துவில் பொலிகண்டி பேரியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வேலன் சுவாமிகள் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதல் தொடர்பில் யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு சுட்டிக்காட்டினார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“கிழக்கு மாகாணத் தமிழர்களின் பாரம்பரிய மேய்ச்சல் நிலங்களான மயிலத்தமாடு மாதவனை மேய்ச்சல் நிலங்கள் சிங்கள பேரினவாதத்தால் திட்டமிட்டு ஆக்கிரமிப்பு செய்யப்படுகிறது.
அந்த மேய்ச்சல் நிலங்களில் வாழ்கின்ற வாயில்லாத ஜீவன்கள் துன்புறுத்தப்படுவதையும், சுட்டுக் கொல்லப்படுவதையும் எதிர்த்து, நீதி கேட்டு, வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று முன்தினம் (05.11.2023) போராட்டம் ஒன்றை மேற்கொண்டார்கள்.
சிங்கள பேரினவாதத்தின் அடக்குமுறைகள்
போராட்டத்தை நிறைவு செய்து திரும்பிக்கொண்டிருந்த நிலையில், சந்தி வெளிப்பொலிஸார் மூன்று வாகனங்களில் மாணவர்களின் பேருந்தை துரத்தி வழிமறித்து, அடையாள அட்டைகளை காண்பிக்குமாறு வற்புறுத்தியுள்ளனர்.
மாணவர்கள் அடையாள அட்டையை காண்பித்தும், 50க்கும் மேற்பட்ட மாணவர்களை பதிவு செய்வதற்காக பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு, பொலிசார் வற்புறுத்திய நிலையில், மாணவர்கள், அடையாள ஆட்டையை காண்பித்து விட்டோம் ஏன் வர வேண்டும், என தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வாறான நிலையில் சிங்கள பேரினவாத அரசின் பொலிஸார், மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தி யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் ஐவரையும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒருவரையுமாக, ஆறு பேரை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று சிறையில் அடைத்துள்ளனர்.
மதத்தலைவர் அருட்பணி ஜெகதாஸ், சிறையில் அடைக்கப்பட்ட மாணவர்களை பார்ப்பதற்காக சென்ற போது, பொலிஸார் அதற்கு அனுமதி வழங்கவில்லை.
நீதிவான் பிணையில் செல்ல மாணவர்களை அனுமதித்த போதும், குறுகிய நேரத்தில் கிராம சேவையாளர்களின் கடிதத்தை பெற வேண்டும் எனக் காரணம் கூறி, விடுவிக்கப்பட்டவர்களை பொலிசார் திட்டமிட்டவகையில் மீண்டும் சிறையில் அடைத்துள்ளனர்.
ஜனநாயக வழியில் போராடிய பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தி கைது செய்தமை கண்டிக்கத்தக்க விடயம் என்பதோடு பேரினவாத அரசாங்கம் தமிழர்கள் மீது தொடர்ந்து அடக்குமுறையை மேற்கொண்டு வருவதை வெளிக்காட்டி நிற்கிறது.
வடக்கு, கிழக்கு தமிழர்கள் ஒன்றிணைவதை சிங்கள பேரினவாதம் விரும்பாத நிலையில், அவர்களால் இணைந்து மேற்கொள்ளப்படும் போராட்டங்களை அடக்குமுறை மூலம் அடக்க நினைக்கின்றது.
தமிழர் பகுதிகளில் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்ந்தும் அச்சுறுத்தப்படுவதும், அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுவதும் தொடரும் நிலையில் சர்வதேச அமைப்புக்கள் தலையீடு செய்ய வேண்டும்.
ஆகவே இலங்கையில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அநீதிகளுக்கு எதிராக உள்ளக விசாரணைகளுக்கு மாறாக சர்வதேச விசாரணையே வேண்டுமென வலியுறுத்தி நிற்பதை இனியாவது சர்வதேச சமூகம் உணர்ந்து கொள்ள வேண்டும்” என தெரிவித்தார்.

தமிழர்களை துண்டு துண்டாக வெட்டுவேன்: அம்பிட்டிய தேரருக்கு சபையில் தகுந்த பதிலடி கொடுத்த சாணக்கியன் (Video)




