மக்களைத் தாக்குவது நாட்டுக்கு எதிரான செயல்: அங்கஜன் இராமநாதன் கண்டனம்
ஜனநாயக மரபுகளின்படி அமைதி வழியில் போராடிய மக்கள் மீது வன்முறை பிரயோகிக்கப்பட்டமையை கண்டிக்கிறேன் என அங்கஜன் இராமநாதன் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
பொதுமக்கள் தமது கோரிக்கைகளை அமைதி வழியில் வெளிப்படுத்திய நிலையில், அவர்கள் மீது இன்று கொழும்பில் இடம்பெற்ற வன்முறைத் தாக்குதலானது மிகவும் அநாகரிகமானது. ஜனநாயக பண்புகளுக்கமைய அமைதியாகப் போராடும் உரிமை நாட்டு மக்களுக்குண்டு. இன்று அந்த உரிமை மீது இரத்தக்கறை படிந்துள்ளது.
இந்த தாக்குதல் சம்பவங்களானது நாட்டின் மக்கள் உரிமைகள், அரசியல் உரிமைகள், மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக மாண்பின் மீது நிகழ்த்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலாக நான் கருதுவதோடு எனது கண்டனத்தை வேதனையடைந்த மனதுடன் தெரிவிக்கிறேன். இந்த வன்முறைச் சம்பவங்களானது, 1983 ஜூலை கலவர நாட்களை மீளவும் நினைவுபடுத்துகிறது.
அந்த வடுக்களை இன்னமும் சுமக்கும் இனத்தின் பிரதிநிதியாக எனது கவலையை நான் பதிவுசெய்கிறேன். ஜனநாயக ஆட்சியென்பது மக்களால் மக்களுக்காக முன்னெடுக்கப்படுவது. வன்முறையால் மக்களைத் தாக்கி கட்டுப்படுத்தி மேற்கொள்ளப்படுவதல்ல.
நாட்டின் சட்ட ஒழுங்கை பாதுகாக்கவேண்டிய பொறுப்பில் உள்ள அனைவரும், இந்த
சம்பவத்தோடு தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக்
கேட்டுக்கொள்கிறேன்.
சர்வதேச ஒத்துழைப்புடன் நாடு, பொருளாதார மீட்சியை எட்டுமென எதிர்பார்த்துள்ள
நிலையில் இச்சம்பவமானது பேரிடியாக மாறியுள்ளது'' இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.