இலங்கை கடற்றொழிலாளர் மீது தாக்குதல்! மோதலை தூண்டிவிடும் செயல்பாடு என கண்டனம்..
கடலில் வைத்து ஒரு கடற்றொழிலாளரை பிடித்துக் கொண்டு போய் கயிற்றால் கட்டப்பட்ட நிலையில், தமிழ்நாட்டு கடற்றொழிலாளர்கள் குறித்த இலங்கை கடற்றொழிலாளரை கடற்கொள்ளையர் என சந்தேகத்தின் பேரில் பிடித்து அவரை அடித்து துன்பப்படுத்துகிற,காயப்படுத்துகிற விதமான புகைப்படங்கள், காணொளி சமூக வலைத்தளங்கள் ஊடாக வெளி வந்துள்ளது.
இந்தநிலையில் குறித்த மனிதாபிமானமற்ற செயற்பாட்டிற்கு சிவில் சமூகம் சார்பாக வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிறாடோ தெரிவித்துள்ளார்.
ராஜதந்திர முறை
மன்னார் மாவட்டத்தில் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் நண்டு வலைகள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (28) காலை மன்னார் மாவட்ட செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.
மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 25 கடற்றொழிலாளர்களுக்கு குறித்த நண்டு வலைகள் வழங்கி வைக்கப்பட்டது. இதன்போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
குறித்த கடற்றொழிலாளர் கடற்கொள்ளையராக இருந்தால் அவரை பிடித்து சட்ட நடவடிக்கைக்கு உற்படுத்தி இருக்க முடியும். இரண்டு நாடுகளுக்குமான ராஜதந்திர முறை இருக்கிறது. அவர்களைப் பிடித்து சட்டத்தின் முன் ஒப்படைக்கப்பட வேண்டும். அது முறையாக விசாரணை செய்யப்பட்டு, இரண்டு நாடுகளும் ராஜதந்திர ரீதியாக கையாளப்பட வேண்டும்.

அதை விடுத்து சக டற்றொழிலாளர்களுக்கு இடையே நீங்கள் தண்டனை கொடுக்க அல்லது பிடித்து அவர்களை இரண்டு பேருக்கும் மாறி மாறி இலங்கையில் இருக்கின்ற கடற்றொழிலாளர்களும் தமிழ்நாட்டில் இருக்கிற கடற்றொழிலாளர்களுக்கும் இடையே நீங்கள் அந்த முரண்பாடுகளை உருவாக்கி விட்டீர்கள் என்றால் இது ஒரு பெரிய ஆபத்தான நிலையை உருவாக்கும். தடை செய்யப்பட்ட காலத்தில் இந்தியா கடற்றொழிலாளர்கள் இழுவைப் படகுகள் தற்போது தடை செய்யப்பட்டிருக்கிறது.
கடல் உற்பத்தி இனங்கள் பெருகும் காலம் என்ற படியினாலே வரமாட்டார்கள். ஆனால் நாட்டுப் படகுகள் இன்னும் வந்து கொண்டிருக்கின்றன.
இழுவைப்படகுகள் வாரத்தில் மூன்று தடவைகளுக்கு மேல் 500 தொடக்கம் 1500 இழுவைப்படகுகள் எங்களுடைய வளத்தை கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
கடற்றொழிலாளர்களின் தார்மீக கடமை
எங்களுடைய நாட்டு வளத்தை அபகரித்துக் கொண்டிருக்கிறார்கள்.ஆனால் பிடிக்கும் அனைவரையும் மரியாதையாகவும், கண்ணியமாகவும், கௌரவமாகவும் எங்களுடைய நீதிமன்றத்தில் இங்கே இருக்கின்ற கடற்றொழிலாளர்கள் அவர்களை கையளிப்பது தான் தார்மீக முறை. இதுதான் சக கடற்றொழிலாளர்களுக்கு இடையிலான உறவை பலப்படுத்தும்.
குற்றம் செய்தவர்களை நீதிமன்றம் தான் கண்டிக்கலாம். அதற்கான தீர்ப்பு வழங்கலாம். இரண்டு நாடுகளுக்கு இடையிலான ராஜதந்திரங்கள் கவனமாகவும், கௌரவமாகவும் மதிக்கப்பட வேண்டும். ஆனால் நாங்கள் பார்க்கும்போது ஒரு கடற்றொழிலாளர் அவர் என்ன குற்றம் செய்திருக்கலாம்? ஆனால் அதை நீதிமன்றங்கள் தான் கையாள வேண்டும். அதற்கான விசாரணை செய்து முறையான தண்டனைகள் அவர் குற்றம் செய்திருந்தால் அவருக்கான தண்டனை வழங்கப்பட வேண்டும்.

அல்லது அவர் நிரபராதி என்றால் முறையாக அந்த நாட்டினுடைய ராஜதந்திர முறைப்படி அவரை விடுதலை செய்யப்பட வேண்டும். அது ஒரு ஒழுக்கம். இதுதான் கடற்றொழிலாளர்களின் தார்மீக கடமை.
மீண்டும் ஒரு முறை சக கடற்றொழிலாளர்களுக்கு தண்டனை கொடுக்க முயலாதீர்கள். அது இரண்டு நாட்டு கடற்றொழிலாளர்களுக்கு இடையே பாரிய விளைவை ஏற்படுத்தும்.
கடுமையான தாக்குதல்
பாரிய பிரச்சனையை ஏற்படுத்தும். எனவே குறித்த கடற்றொழிலாளரை தமிழ் நாட்டு கடற்றொழிலாளர்கள் கடுமையாக தாக்கியதற்காக சிவில் சமூகம் சார்பாக கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தில் வாழ்வாதாரத்திற்காக கடற்றொழிலை பிரதான தொழிலாக கொண்டுள்ள கடற்றொழிலாளர்கள், அண்மையில் ஏற்பட்ட 'டித்வா' புயல் காரணமாக தமது மீன்பிடி வலைகள் உள்ளிட்ட அத்தியாவசிய உபகரணங்களை இழந்து பெரும் பாதிப்புக்குள்ளாகினர்.

இவ்வாறு பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களை அடையாளம் காணும் பணிகள், மன்னார் மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தின் வழிகாட்டுதலின் கீழ் முறையாக முன்னெடுக்கப்பட்டன.
இதன் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட 25 கடற்றொழிலாளர்களுக்கு, அவர்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில் நண்டு வலைகள் வழங்கும் நிகழ்வு இன்று (28) மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஜெய்க்கா (JICA) மண்டபத்தில் நடைபெற்றது. MSEDO நிறுவனத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.