சற்றுமுன்னர் பதவி விலகிய SLC தலைவர் ஷம்மி சில்வா
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா தனது பதவியிலிருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (28.4.2026) பிற்பகல் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தின் போது அவர் இந்தத் தீர்மானத்தை அறிவித்துள்ளார்.
பதவி விலகல் தீர்மானம்
ஷம்மி சில்வா 2019 ஆம் ஆண்டு முதன்முறையாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டதுடன், அன்று முதல் இதுவரையான 7 ஆண்டு காலம் அந்த பதவியில் நீடித்தார்.

கடந்த காலங்களில் அவருக்கும் கிரிக்கெட் நிர்வாகத்திற்கும் எதிராகப் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போதைய கிரிக்கெட் நிர்வாகத்தைப் பதவியிலிருந்து விலகுமாறு அரசாங்கத் தரப்பு அறிவுறுத்தியுள்ளதாக அண்மையில் ஊடகச் செய்திகள் வெளியாகியிருந்தன.
தற்போது பெரும் பேசுபொருளாக உள்ள கிரிக்கெட் வீரர்களின் முகாமையாளர் ஒருவர் மற்றும் சிரேஷ்ட கிரிக்கெட் வீரர்கள் சிலர் உள்ளிட்ட குழுவினர், அரசாங்கத்தின் உயர்மட்டத் தரப்பினரைச் சந்தித்து தற்போதைய கிரிக்கெட் நிர்வாகம் குறித்துப் முறைப்பாடு அளித்திருந்த பின்னணியில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.