முககவசம் அணியாதவரை எச்சரித்த பொது சுகாதார பரிசோதகர் மீது தாக்குதல்
மட்டக்களப்பு - வாழைச்சேனை பிரதேசத்தில் கடை முதலாளி ஒருவர் முககவசம் அணியாது கடையில் வியாபாரத்தில் ஈடுபட்ட போது அவரை முககவசம் அணியுமாறு எச்சரித்த பொதுச் சுகாதார பரிசோதகர் மீது மண்வெட்டியால் தாக்குதல் நடாத்தியதில் அவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று(31) இடம்பெற்றுள்ள இச்சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
வாழைச்சேனை விபுலானந்தர் வீதியில் சில்லறைக் கடை ஒன்றை நடாத்திவரும் கடை முதலாளி நேற்று காலை வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த நிலையில் பொதுச் சுகாதார பரிசோதகர் ஒருவர் அங்கு சென்று முககவசம் அணியாது வியாபாரம் செய்யவேண்டாம் எனவும், முககவசம் அணிந்து வியாபாரத்தில் ஈடுபடுமாறு கடை முதலாளியை எச்சரித்துள்ளார்.
இதனையடுத்து குறித்த முதலாளி கடையில் முன் இருந்த மண்வெட்டியால் பொதுச் சுகாதார பரிசோதகர் மீது தாக்குதலை நடாத்தியுள்ளார்.
அதனை அடுத்து அவர் படுகாயமடைந்த நிலையில் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் குறித்த தாக்குதலில் ஈடுபட்ட கடை முதலாளியை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.