இலங்கையின் அழைப்பை ஏற்று வந்த ஈரானிய கப்பல் மீது தாக்குதல்: இம்ரான் மகரூப் கடும் கண்டனம்
இலங்கை கடற்படைத் தளபதியின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில், நட்புறவு விஜயத்தை மேற்கொண்டு இலங்கையை நோக்கி வந்து கொண்டிருந்த ஈரானியக் கப்பலான 'ஐ.ஆர்.ஐ.எஸ் டெனா' மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரானிய தூதுவர் தெரிவித்துள்ளார்.
இந்தத் தகவல் அதிர்ச்சியளிப்பதோடு, இலங்கையின் தேசிய பாதுகாப்பையும் இறைமையையும் பாரிய கேள்விக்குறியாக்கியுள்ளதாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கூறியுள்ளார்.
நேற்று (23.3.2026) கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இலங்கைக்கான ஈரானிய தூதுவர் அலிரெஸா டெல்கோஷ் முன்வைத்த திடுக்கிடும் உண்மைகள் குறித்து ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள இம்ரான் மகரூப், அரசாங்கத்தின் பொறுப்பற்ற போக்கை வன்மையாகக் கண்டித்துள்ளார்.
கப்பல் மீது தாக்குதல்
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இந்தியாவில் இடம்பெற்ற 'மிலான்-2026' சர்வதேச கடற்படைப் பயிற்சியின் போது, இலங்கை கடற்படைத் தளபதியால் விடுக்கப்பட்ட நேரடி அழைப்பின் பெயரிலேயே ஈரானியக் கப்பல் இலங்கையை நோக்கி வந்துள்ளது.
எமது நாட்டுக்கு விருந்தினராக வருமாறு ஒரு தரப்பை அழைத்துவிட்டு, அவர்கள் எமது கடல் எல்லைக்கு மிக அருகில் வைத்துத் தாக்கப்படுவதை அரசாங்கம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. சர்வதேச இராஜதந்திர ரீதியில் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பாரிய அவமானமாகும்.

காலி நகருக்குத் தெற்கே சுமார் 40-44 கடல் மைல் தொலைவில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
இலங்கையின் கடல் எல்லைக்குள் அல்லது அதற்கு மிக அண்மித்த பகுதியில் மற்றுமொரு நாடு தன்னிச்சையாகத் தாக்குதல் நடத்துவதென்பது நாட்டின் இறைமைக்கு விடுக்கப்பட்ட நேரடி சவாலாகும்.
இந்தத் தாக்குதல் குறித்து அரசாங்கம் ஏன் இன்னும் மௌனம் காக்கிறது, எமது கடற்பரப்பு அந்நிய நாடுகளின் போர்க்களமாக மாறுவதை அரசாங்கம் அனுமதிக்கிறதா, தூதுவரின் கருத்தின் படி, தாக்கப்பட்ட கப்பலில் இருந்தவர்கள் போர் வீரர்களோ அல்லது ஆயுதமேந்தியவர்களோ அல்ல. அவர்கள் சக்ஸபோன் உள்ளிட்ட பேன்ட் வாத்தியக் கருவிகளை இசைக்கும் கலைஞர்கள்.
கண்டனம்
சுமார் 104 பேரின் உயிர்களைக் காவு வாங்கியுள்ள இந்தத் தாக்குதல் ஒரு மனிதாபிமானமற்ற செயலாகும். இலங்கையின் அழைப்பை ஏற்று வந்தவர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்கத் தவறியதன் மூலம் இந்த உயிரிழப்புகளுக்கு இலங்கை அரசாங்கமும் தார்மீகப் பொறுப்பேற்க வேண்டும்.
தாக்குதலுக்குப் பின்னர் திருகோணமலை துறைமுகத்தில் நங்கூரமிட அனுமதிக்கப்பட்ட 'ஐ.ஆர்.ஐ.எஸ் புஷெர்' கப்பல் ஏன் இன்னும் அங்கு கொண்டு செல்லப்படவில்லை.
அத்தோடு, அத்துமீறிய தாக்குதலை நடத்திய அமெரிக்காவுக்கு எதிராகச் சர்வதேச மட்டத்தில் இலங்கை அரசாங்கம் இதுவரை எவ்வித எதிர்ப்பையும் பதிவு செய்யாதது ஏன்.

அரசாங்கம் தனது வெளிநாட்டுக் கொள்கையில் காட்டும் பலவீனமும், வல்லரசு நாடுகளின் அழுத்தங்களுக்குப் பணிந்து போவதும் இலங்கையை ஒரு பாதுகாப்பற்ற நாடாக மாற்றியுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து பாதுகாப்பு அமைச்சு மற்றும் வெளிவிவகார அமைச்சு உடனடியாகத் தெளிவான விளக்கத்தை நாட்டுக்கு வழங்க வேண்டும்.
எமது நாட்டின் கௌரவத்தையும், இறைமையையும் அடகு வைக்கும் இத்தகைய செயற்பாடுகளை நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
லண்டனில் தன்னார்வ யூத ஆம்புலன்ஸ்கள் தீ வைப்பு: இது கோழைத்தனம்! பிரதமர் ஸ்டார்மர் கண்டனம் News Lankasri
பாக்கியலட்சுமி சீரியல் ஜோடி நடிக்கும் புதிய சீரியலில் இணைந்த பிரபல நடிகர்... இவர்தான் ஹீரோவா? Cineulagam