ஜனாதிபதி மட்டுமல்ல பிரதமரும் பதவி விலக வேண்டும்: விசேட மருத்துவர்களின் சங்கம்
நாட்டின் தற்போதைய ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் உடனடியாக பதவிகளில் இருந்து விலக வேண்டும் என விசேட மருத்துவர்களின் சங்கம் ஏகமனதாக தீர்மானத்தை எடுத்துள்ளது.
நேற்று (24) நடைபெற்ற சங்கத்தின் வருடாந்த மாநாட்டில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக விசேட மருத்துவர்களின் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.
ஜனாதிபதியும், பிரதமரும் பதவி விலகிய பின்னர், இலங்கை பொது மக்கள் எதிர்நோக்கி இருக்கும் பொருளாதார நெருக்கடியை முகாமைத்துவம் செய்ய புதிய இடைக்கால அரசாங்கம் நியமிக்கப்பட வேண்டும் எனவும் அந்த சங்கம் கூறியுள்ளது.
ஏற்கனவே நாட்டில் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி மக்கள் இரண்டு வாரங்களாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் போராட்டங்களில் பிரதான போராட்டம் கொழும்பு காலிமுகத் திடலில் கடந்த 9 ஆம் திகதி முதல் நடந்து வருகிறது.
இந்த நிலையில், மக்களின் கோரிக்கையை ஏற்று ஜனாதிபதியும் அரசாங்கமும் பதவி விலகி, இடைக்கால அரசாங்கம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என பல தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.