நியூசிலாந்து தாக்குதலுக்கு காத்தான்குடி பள்ளிவாயல்கள் சம்மேளனம் கண்டனம்
சர்வதேச பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் கொள்கைகளை ஆதரிக்கும் போக்குடைய இலங்கைப் பிரஜை ஒருவர் பொது மக்களைக் கத்தியால் குத்தி காயப்படுத்திய கொடூரமான பயங்கரவாத சம்பவம் குறித்து அறிந்ததில் மிகுந்த அதிர்ச்சியும் கடுமையான மனவேதனையும் அடைகிறோம் என காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் மற்றும் அகில் இலங்கை ஜம்மியதுல் உலமாவின் காத்தான்குடிக் கிளை இணைந்து விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நியூசிலாந்து பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் செப்டெம்பர் 3, 2021 அன்று நியூசிலாந்தின் ஒக்லாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள லைன் கவுண்டொளன் பேரங்காடியின் உள்ளே சர்வதேச பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் கொள்கைகளை ஆதரிக்கும் போக்குடைய இலங்கைப் பிரஜை ஒருவர் பொது மக்களைக் கத்தியால் குத்தி காயப்படுத்திய கொடூரமான பயங்கரவாத சம்பவம் குறித்து அறிந்ததில் மிகுந்த அதிர்ச்சியும் கடுமையான மனவேதனையும் அடைகிறோம்.
வெறுக்கத்தக்க மிலேச்சத்தனமான இப்பயங்கரவாதச் செயலை குறிப்பாக காத்தான்குடி மக்கள் சார்பாகவும், இலங்கை முஸ்லிம் சமுகம் சார்பிலும் எமது சம்மேளனமும், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் காத்தான்குடி கிளையும் இணைந்து வன்மையாகக் கண்டிக்கிறோம்.
அதேவேளை இச்சம்பவம் தொடர்பில் உத்தியோகபூர்பமாக அறிக்கை வெளியிட்ட நியூசிலாந்து பிரதமர் ஜெசின்ரா அட்றென் கூறிய நேர்மையானதும், நடுநிலையானதுமான வார்த்தைகள் அர்த்தம் மிக்கவையும் மெச்சத்தக்கவையுமாகும்.
தாக்குதலைச் செய்தவர் ஒரு தனி நபர், அவர் செயலுக்கு அவர் மட்டுமே பொறுப்பாவார். தாக்குதல் சம்பவம் ஒரு மத நம்பிக்கையையோ, குறிப்பிட்ட இனக்குழுவையோ, கலாச்சாரத்தையோ சாராது என்று அவர் குறிப்பிட்டிருந்தார். எமது கருத்து நிலையும் அது சாந்த்தாகவே இருக்கிறது. நிச்சயமாக இத்தாக்குதலானது மிகப்பிழையானது, அருவருப்பான செயலும் கூட. தீவிரவாதமும் பயங்கரவாதமும் அதன் எந்த வடிவிலும் ஏற்கத்தக்கதல்ல.
எந்தவெரு இனமோ, மதமோ, கலாச்சாரமோ அதற்குச் சார்பாகவோ பொறுப்பாகவோ இருக்கவும் முடியாது. இருக்கவும் கூடாது. தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள் , காயமடைந்தவர்கள் அவர்களது குடும்பங்களின் வலியை நாமும் உணர்கிறோம். மனிதம் சார்ந்த உறவு நிலையில் இன,மத, தேச வேறுபாடுகளைக் கடந்து அவர்களுக்கான எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவிக்கிறோம்.
பல்முனை ஊடகங்கள் வாயிலாகவும், உள்ளூர் மட்ட அறிதல்கள் அடிப்படையிலும் நாம் அறிவது என்னவென்றால் இவ்வீனசெயலைப் புரிந்த பயங்கரவாதியும் அவரது குடும்பத்தினரும் நீண்ட நாட்களாக காத்தான்குடியில் இருக்கவில்லை. தொழில் , கல்வி மற்றும் இன்னபிற காரணங்களுக்காக ஊரைவிட்டு வெளியேறி நீண்ட காலமாக வெளியில்தான் வாழ்ந்தனர்.
குறிப்பாக ஸ்தலத்திலேயே சுட்டுக்கொல்லப்பட்ட குறிப்பிட்ட பயங்கரவாதி சிறிய வயதிலேயே ஊரை விட்டு வெளியேறியவர், உள்ளூர் சமூக தொடர்பறுந்த வராகவே அவர் இருந்தார் என்றும் அறிகிறோம். இந்தப் பின்னணியை மையப்படுத்தி இந்நாட்டின் ஒரு இனத்தைக் கொச்சைப் படுத்துவதையும் ஓர் ஊரின் கண்ணியத்தை பங்கப்படுத்தும் வகையில் நடந்து கொள்வதையும் பொறுப்பு வாய்ந்த சிவில், மார்க்க அமைப்புக்கள் என்ற வகையில் நாம் கவலையுடன், விசனத்துடன் நோக்குகின்றோம்.
இருந்தபோதிலும்கூட, இம்மிருகத்தனமான செயலை வன்மையாகக் கண்டிக்கும் அதேவேளை, நாங்கள் அனைவரும் இதனால் காயமுற்ற, பாதிப்புற்ற உங்கள் அனைவரோடும் மானசீகமா இணைந்திருக்கிறோம் என்பதை எமதூர் மக்கள் சார்பில் எமது இவ்விணைந்த கண்டன அறிக்கை மூலமாகத்தெரிவிக்க விரும்புகிறோம்.
அத்தோடு மனிதத்தின் பொது எதிரியான வன்முறைத் தீவிரவாதம் மற்றும் மதப் பயங்கரவாதத்தினை ஒழிப்பதற்காக நியூசிலாந்து அரசாங்கத்தோடும், அந்நாட்டு மக்களோடும் ஒன்றிணைகிறோம்.
மாத்திரமின்றி எமது தாய் நாடான இலங்கையிலும் இவ்வபாயத்துக்கெதிராக நாட்டின் தலைமைத்துவத்தோடும் ஒத்துழைக்கிறோம் என்பதையும் தெரிவிக்க விரும்புகிறோம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


புத்திகூர்மையுடன் பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க Manithan

300 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் திரிகிரஹி யோகம்.. இனி பண மழை கொட்டுமாம்..அதிர்ஷ்டம் யாருக்கு? Manithan

கடைசி டெஸ்டில் ஏஞ்சலோ மேத்யூஸ்! நீ உன் தேசத்திற்கு உண்மையான சேவகன் - ரோஹித் ஷர்மா பிரியாவிடை News Lankasri
