யாழ். திருச்சபை ஆதீன ஊழியருக்கான சேமலாப நிதி குறித்து விதிக்கப்பட்டுள்ள பணிப்புரை
யாழ்ப்பாண திருச்சபை ஆதீன ஊழியருக்கான சேமலாப நிதியை ஒரு மாதத்திற்குள் செலுத்துமாறு பணிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் (30.01.2023) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது.
தென்னிந்திய திருச்சபை யாழ்ப்பாண ஆதீனத்தின் ஊழியரான வணபிதா ஜோன் தேவசகாயம், முறையற்ற வகையில் தனக்கு இடமாற்றம் வழங்கப்பட்டமை மற்றும் ஊழியர் சேமலாப நிதி வைப்பிலிடாமை தொடர்பில் தொழில் திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
முன்னறிவிப்புமின்றி மேற்கொள்ளப்பட்ட இடமாற்றம்
விசுவமடு திருச்சபையில் ஊழியராக பணியாற்றிய குறித்த ஊழியர் கடந்த (23.12.2022) அன்று பணிமாற்றம் என தெரிவித்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
19ஆம் திகதி கூடிய செயற்குழு உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றம் என அறிவித்துள்ளனர்.
எவ்வித முன்னறிவிப்புமின்றி மேற்கொள்ளப்பட்ட இடமாற்றம் தொடர்பில் அதிருப்தி அடைந்த குறித்த ஊழியர், இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த முறைப்பாடு நேற்றைய தினம் (30.01.2023) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
நீதியை பெற்றுக் கொள்ள முடியும்
இதன்போது, 1997ஆம் ஆண்டு முதல் இன்று (நேற்று) வரையான காலப்பகுதிக்கான ஊழியர் சேமலாப நிதி செலுத்தப்படாமை குறித்து அதிகாரிகள் கண்டித்துள்ளனர்.
அத்துடன், முறைப்பாட்டாளருக்கான குறித்த தொகையை செலுத்துவதற்கு ஒரு மாத காலத்திற்குள் நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்துள்ளனர். தவறின் சட்ட நடவடிக்கைக்குட்படுத்தப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், முறையற்ற இடமாற்றம் தொடர்பில் ஆராய்ந்த விசாரணையாளர்கள் நியாயப்பாடுகள் இருப்பினும், தமக்கு அதிகாரங்கள் இல்லை எனவும், இவ்விடயம் தொடர்பில் தொழில் நியாய சபை ஊடாக நீதியை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
தென்னிந்திய திருச்சபை யாழ். பேராயத்திற்கு புதிய பேராயர்
நியமிக்கப்பட்டு பேராயரினால் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில்,
நிர்வாக நடவடிக்கையில் ஈடுபடும் சிலரால் இவ்வாறான நிலைக்கு தள்ளப்படுகின்றமை
புதிய பேராயருக்கும், ஆதீனத்துக்கும் அவப்பெயரை தோற்றுவிப்பதாக கவலை
வெளியிடப்படுகிறது.