சர்வதேச அரை மரதன் ஓட்டப்போட்டி: உள்நாட்டு, வெளிநாட்டு வீரர்கள் என 200 பேர் பங்கேற்பு
அறுகம்பே அபிவிருத்தி போரம் ஏற்பாடு செய்துள்ள அறுகம்பே சர்வதேச அரை மரதன் ஓட்டப்போட்டி எதிர்வரும் 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளதாகவும், அதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாகவும் போரத்தின் தலைவரும், இயன்மருத்துவருமான இஸட்.எம்.ஹாஜித் தெரிவித்துள்ளார்.
அறுகம்பே சர்வதேச அரை மரதன் ஓட்டப்போட்டி தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று(01) மாலை அறுகம்பே paddyway உல்லாச விடுதியில் இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அரை மரதன் போட்டி
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“உலகில் இடம்பெற்றுவரும் பிரசித்திபெற்ற மரதன் ஓட்டப்போட்டிகளில் அறுகம்பே அரை மரதன் போட்டியும் இடம்பிடிக்க வேண்டும் எனும் நோக்கில், அறுகம்பே மரதன் ஓட்டப்போட்டியினை நடாத்தி வருகின்றோம்.
இம்முறை 6ஆவது தடவையாகவும் குறித்த மரதன் ஓட்டப்போட்டியினை மிகவும் சிறப்பாக நடாத்தவுள்ளோம். அறுகம்பே அரை மரதன் ஓட்டப் போட்டியானது உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
தற்போது உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அறுகம்பை பிரதேசத்தை நோக்கி அதிகரித்துக் காணப்படுகிறது.
இக்காலகட்டத்தில் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையிலும், சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் பொருட்டும் இம்மரதன் ஓட்டப் போட்டியினை சர்வதேச தரத்தில் நடாத்துவதற்குரிய ஒழுங்குகளை செய்துள்ளோம்.
இப்போட்டியில் உள்நாட்டு, வெளிநாட்டு வீரர்கள் என 200பேர் பங்கேற்கவுள்ளதுடன் இதில் 150
உள்நாட்டு வீரர்களும் 50 வெளிநாட்டு வீரர்களும் கலந்துகொள்ளவுள்ளனர். ” என அவர் தெரிவித்துள்ளார்.